66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விருது நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார்.மமலையாளத் திரையுலகுக்கு ஏழு தேசிய விருதுகள் கிடைத்தும் மலையாள ரசிகர்களுக்கு ஒரு மனக்குறை. பேரன்பு படத்துக்காக மம்மூட்டிக்குச் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லையே என. இதனால் தேசிய விருது நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் ஃபேஸ்புக் பக்கம் சென்று தங்கள் குமுறல்களை வெளியிட்டுள்ளார்கள். விமரிசனங்கள் மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மம்மூட்டிக்கே கடிதம் எழுதிவிட்டார் ராகுல்.
அக்கடிதத்தில் அவர் எழுதியதாவது:
மம்மூட்டி, உங்களுடைய ரசிகர்களிடமிருந்து மோசமான எதிர்வினைகளை நான் எதிர்கொண்டு வருகிறேன். பேரன்பு படத்துக்காக உங்களுக்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருதைத் தரவில்லை என. முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.
நடுவர் தீர்ப்பைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அடுத்ததாக, நீங்கள் நடித்த பேரன்பு படம் உள்ளூர் குழுவால் நிராகரிப்பட்டது. அது மையக் குழுவின் பார்வைக்கே வரவில்லை. தோற்றுப்போய்விட்ட ஒன்றுக்காக உங்களுடைய ரசிகர்கள் சண்டையிடுவதை நிறுத்தச் சொல்லுங்கள். நடுவர் தீர்ப்பை எப்போதும் கேள்வி கேட்காதீர்கள் என்று எழுதியுள்ளார்.
இதற்கு மம்மூட்டி பதில் அளித்ததையும் தன்னுடைய ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார். மம்மூட்டி கூறியதாவது:
மன்னிக்கவும் சார். எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.