
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்து வந்துள்ளார்.
சமீபத்தில், மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா உறுப்பினா் பதவிக் காலம் முடிவடைந்தது.
மீண்டும் அவரை, ராஜ்யசபா, உறுப்பினராக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.
ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை
இதனால், அவரை மீண்டும் ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, பா.ஜ., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த, மதன் லால் சைனி, சமீபத்தில் காலமானார்.

இதனை தொடா்ந்து ராஜ்யசபாவில், அவரது இடம் காலியானது. ராஜஸ்தானில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இங்கிருந்து, ஒரு ராஜ்யசபா, எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவுக்கு, காங்கிரசுக்கு சட்டசபையில் பலம் உள்ளது.
இதையடுத்து, இந்த இடத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை போட்டியிட வைக்க, காங்., மேலிடம் முடிவு செய்தது.
இதனை தொடா்ந்து இன்று, ஜெய்ப்பூர்க்கு வந்த மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில, காங்., தலைவருமான, சச்சின் பைலட், மற்றும் கட்சி மேலிட நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.



