சென்னை”
சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் அவரது சீடர் விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில் ஒருமாத காலம் விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர். பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி சாரதா பீட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாக இருப்பவர் பாரதி தீர்த்த மகாசுவாமிகள். இவர் 2012-ல் தமிழகத்தில் நீண்டநாட்கள் விஜய யாத்திரை மேற்கொண்டார்.
கடந்த 2015-ல் விதுசேகர பாரதி சுவாமிகளை தனது சீடராக நியமித்தார். இந்நிலையில், தமிழக பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இருவரும் சேர்ந்து முதல் முறையாக தமிழகத்துக்கு விஜய யாத்திரை மேற்கொள்கின்றனர்.
மார்ச் 9-ம் தேதி தொடங்கி கர்நாடகாவின் பல பகுதிகளுக்குச் செல்லும் அவர்கள் மார்ச் 14-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருகை தருகின்றனர்.
14, 15-ல் சத்திய மங்கலம்
16, 17-ல் கோபி செட்டிபாளையம்,
18-ல் ஈரோடு,
19, 20, 21-ல் சேலம்,
22-ல் நாமக்கல்,
23, 24-ல் திண்டுக்கல்,
25-ல் தென்கரை,
26-ல் கொடிமங்கலம் என்று பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து,
27-ம் தேதி மதுரை வந்தடைகின்றனர். தங்கும் இடங்களில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடத்து கின்றனர்.
மதுரையில் பிறந்தநாள் விழா:
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ஒருவார காலம் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.
ஏப்ரல் 2-ம் தேதி பாரதி தீர்த்த சுவாமிகளின் 67-வது பிறந்தநாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாருத்ரம், சதசண்டி யாகங்களும் நடக்க உள்ளன.
ஏப்ரல் 4-ம் தேதி புறப்பட்டு ராஜபாளையம் செல்லும் அவர்கள், அங்குள்ள ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த பாரதி வேத பாடசாலையில் 13-ம் தேதி வரை தங்கியிருந்து அருளாசி வழங்குகின்றனர்.
இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.