மூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்!

Published:

govarthana giri
govarthana giri

கோகுலத்தில் இந்திர விழாவை தடை செய்த கிருஷ்ணன் கோவர்த்தன கிரி பூஜை செய்யலாம் என்று சொன்னதால் அது கேட்டு வெகுண்ட இந்திரன் வருணனை அழைத்து கோகுலத்தில் மழை பெய்வித்து கோகுலத்தையே அழித்து விடுமாறு உத்தரவிட்டான். வருணனும் மிக பயங்கரமாக மழையை கோகுலத்தில் பொழிவித்தான்.

உடனே கோவர்த்தனகிரியை தனது சுண்டு விரலால் தூக்கி அனைத்து மக்களையும் ஆடுகளையும் மாடுகளையும் கோவர்த்தனகிரியில் வரச் செய்து அனைவரையும் மழையிலிருந்து காப்பாற்றினான்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டிதீர்த்தது குழந்தைகள் ஆடுமாடுகள் அனைவரும் ஆனந்தமாய் கோவர்த்தனகிரியில் இருந்து மழை பொழிவதை ரசித்து கொண்டிருந்தார்கள். அப்போது கோவர்த்தனகிரியும் நகைத்தது.

அதைக் கண்ட கண்ணன் கோவர்த்தனகிரியிடம் என்ன சிரிப்பு ?என் விரல் வலிக்குமே என்று உனக்கு வருத்தம் இல்லையா? கவலை இல்லையா ? என்று கேட்டான்.

அதற்கு கோவர்த்தனகிரி வலியா உனக்கா உலகம் முழுதும் தாங்குபவன் நீ. வராக அவதாரத்தில் பூமி முழுவதையுமே தாங்கி கடலிலிருந்து மேலே கொண்டு வந்தவன் தானே நீ. உன்னை நம்பினால் உலகம் மேலே வரும் என்பது உண்மைதானே. மேலும் உனக்கு வலிக்க கூடாது என்ற காரணத்தினால் என்னால் இயன்றவரை என்னை லேசாக்கி கொண்டு விட்டேன் தெரியுமா என்று மலை வினவியது.

மேலும் கோவர்த்தனகிரி கூறியது இங்குள்ள மக்களின் முகங்களை பார்த்தாயா உன்னை சரண் அடைந்து உன் அருளில் நிழலில் ஒதுங்கும் அவர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த முன்வினை பயன் என்ற ஒன்று கூட கிடையாது. அதற்கு நிரூபணம் நானே என்று கோவர்த்தனகிரி கூறியது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

அதற்கு கிருஷ்ணன் முன் ஜென்மம் பற்றி பேசுகிறாயே. இது துவாபர யுகம். திரேதா யுகத்தில் நீ யாராக இருந்தாய் என்று உனக்கு நினைவு உள்ளதா என்று கேட்டார். அப்பொழுது மலையின் மனதில் போன ஜென்மத்து ஞாபகம் சிந்தனைகளோடு ஓடிற்று.

திரேதாயுகம் இராமாயண காலம் சேதுபந்தனம் நடந்து கொண்டிருக்கிறது. சேதுபந்தனத்திற்காக ஆஞ்சநேயர் வடக்கிலிருந்து பெரும் மலைத் தொடரிலிருந்து ஒவ்வொரு மலையாக எடுத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மலை கூட்டத்தின் இடையே இருந்த சுமேரு என்ற மலையையும் கையில் எடுத்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆகாசத்திலிருந்து பார்த்த அனுமன் சேதுபந்தனம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து அந்த மலையை அதே இடத்தில் வைத்தார்.

உடனே சுமேரு மிகவும் வருந்தி பிரபு என் உற்றார் சுற்றம் உறவினர் சொந்தம் அண்ணன் தம்பி அனைவரும் சேது பந்தனத்திற்கு பயன்படுகிறது. நானும் அதற்கு பயன்படுவேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என்னை இப்படி பாதி வழியில் தொப்பென்று வைத்து விட்டீர்களே என்று கேட்டது.

Tripathi
Tripathi

அது கேட்டு உடனே ஆஞ்சநேயர் ராமரிடம் சென்று இது போன்று கூற ராமர் அந்த மலையிடம் அடுத்த ஜென்மத்தில் நீ கடவுளுக்கு பயன்படுவாய். காலம் கனிந்து வரும். அதுவரை காத்திரு என்று கூறுவாயாக என்று கூறினார் ஆஞ்சநேயரும் அதை அப்படியே வந்து சுமேருவிடம் கூறினார். இதுவே கோவர்த்தனகிரியின் முந்திய பிறப்பு. இரண்டாவது கோவர்த்தனகிரி.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஏழுநாள் மழைக்கு பிறகு இந்திரன் வந்து கண்ணனிடம் பணிந்து தான் செய்த தவறை மன்னித்து அருளுமாறு வேண்ட கண்ணனும் இந்திரனை மன்னித்தருளினான்.

இந்திரா தான் என்ற அகம்பாவம் மட்டும் என்றும் கூடாது. என்றுமே உன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டு செயல்படு என்று கூற இந்திரன் சரணடைந்தவர்களை காக்கும் பக்தவச்சலா என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி அவன் இந்திரலோகம் சென்றான்.

மழை நின்றவுடன் யாதவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்ல கோவர்த்தனகிரியை பகவான்
கீழே வைத்தார் .அப்பொழுது மலை பகவானை பார்த்து பகவானே உனக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறியது.

அதை கண்டு நகைத்த கிருஷ்ணன் மலையே நீ எனக்கு சேவை செய்தாயா நான் அல்லவா உன்னை ஏழு நாள் தூக்கி கொண்டு இருந்தேன். நான் அல்லவா உனக்கு சேவை செய்தேன் என்று கூறினார்.

உடனேயே கோவர்த்தனகிரி அபச்சாரம் அபச்சாரம் என்று தன் கன்னத்தில் போட்டு கொண்டது. வார்த்தைகளை மாற்றி பேசுகிறாயே கண்ணா. நீ தான் திருட்டு கண்ணன் ஆயிற்றே. நீ எதை சொன்னாலும் உலகமே கீதை என்று கேட்கும். அடுத்து வரும் கலியுகத்திலாவது நான் உனக்கு சேவை செய்யும் வாய்ப்பை கொடு என்று கேட்டது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

கண்ணன் மலையை கனிவுடன் பார்த்தார். தான் தூக்கி நின்ற ஏழு நாட்களும் மலை தன்னைத்தானே இலேசாக்கி கொண்டதையும் எண்ணி பார்த்தார் பின்பு புன்முறுவலோடு அதன் வேண்டுகோளுக்கிணங்கி அதற்கு அருள் புரிந்தார்.

மலையே துவாபரயுகத்தில் ஏழு நாள் நான் உன்னை தாங்கினேன். அதற்கு பதிலாக கலியுகத்தில் நீ ஏழுமலையாகி என்னைத் தாங்குவாயாக. நான் ஸ்ரீநிவாசனாக உன்மேல் கோயில் கொள்வேன். மலையப்பன் என்று மக்கள் என்னை வணங்குவார்கள்.

அந்த இடம் திருப்பதி என்று அழைக்கப்படும். திருப்பதியில் உன் மேல் தங்கும் நான் வரும் அனைவருக்கும் அனைத்தையும் வாரி வழங்குவேன். உன் மலைமேல் ஏறி வந்து என்னை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லா வளங்களையும் நலன்களையும் செல்வங்களையும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்குவேன் என்று கண்ணன் கோவர்த்தனகிரியிடம் கூறினார்.

அதுவே இப்பிறவியில் ஏழுமலையாக சீனிவாசனை தாங்கி கொண்டிருக்கிறது.

இதுவே மலையின் மூன்று பிறவியாகும். திரேதாயுகத்தில் சுமேரு மலையாகவும் துவாபரயுகத்தில் கோவர்த்தன கிரியாகவும் கலியுகத்தில் ஏழுமலையாகவும் வரம் பெற்று பகவானின் அருளை பெற்று விளங்குகிறது.

Related articles

Recent articles

spot_img