
ஒரு சமயம் இரண்டு அடுத்தடுத்த மரங்களின் தாழ்வான இரு கிளைகளுக்கிடையில் இருந்த ஒரு சிறு
இடைவெளியில் தன் கையை வைத்துக்கொண்டு ஒரு குரங்கு மிகவும் வருத்தத்துடன் இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஆசார்யாள் அதன் வருத்தத்திற்கான காரணத்தைத் தெரிந்து கொள்வதற்காகவும். அதன் கையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவும். அவர் தமது தலையைத் தரைக்கு அருகில் கொண்டு சென்றார்.
யாரோ தூக்கிப் போட்ட ஓர் ஆப்பிள் பழம் அதன் கையிலிருந்ததை அவர் கவனித்தார். பழத்தை இழப்பதற்கும் மனமில்லாமல், பழத்தோடு கையை வெளியே எடுக்கவும் முடியாமல், அது மிகவும் கஷ்டப்படுகிறது என்பது அவருக்குப் புரிந்து விட்டது.
“குரங்குகள் மிகவும் புத்திசாலியாயிருந்த போதிலும், ஏனோ இதற்கு, பழத்தைப் போட்டுவிட்டு கையை மரக்கிளையிலிருந்து விடுவித்துக் கொண்டு, பிறகு அப்பழத்தை இடைவெளிக்குக் கீழே பிடித்துக் கொள்ளலாம் என்று தோன்றவில்லையே” என்று எண்ணி வியந்தார் ஆசார்யாள்.

அக்குரங்கினிடத்தில் அவருக்கு இரக்கம் பிறந்தது. எனவே, அதுவே உண்டாக்கிக் கொண்ட அதன் கஷ்டத்திலிருந்து அதை விடுவிப்பதற்காக அவர் ஒரு வாழைப்பழத்தை உரித்து அதன் வாயருகில் கொண்டு சென்றார். குரங்கு தலையை முன்னே சாய்த்துப் பழத்தைக் கவ்விக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
ஆனால் தன் கையிலிருந்த ஆப்பிள் பழத்தையும் அது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆசார்யாள் இரண்டாவது பழத்தை உரித்தார். இந்தத் தடவை பழத்தைக் குரங்கின் அருகில் கொண்டு செல்லாமல். சிறிது தூரத்தில் அதை வைத்துக் கொண்டார்.

அது தனக்கு வேண்டிய பழத்தை கையை நீட்டி வாங்கிக் கொள்வதற்காக ஆப்பிளை விடுவித்துவிட்டு வாழைப் பழத்தைப் பெற்றுக் கொண்டது. பழத்தை அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் ஆசார்யாள் கீழே விழுந்த ஆப்பிள் பழத்தையும் எடுத்து மீண்டும் அதனிடம் கொடுத்தார்.
ஆசார்யாள் இயற்கையைப் பற்றிக் கூறும்பொழுது “இறைவனின் படைப்பு மிக வசீகரமானது. இயற்கை நமக்கு கடவுளை ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் இயற்கையானது எல்லோர் முன்பும் காணப்படும் இறைவனின் வடிவமேயாகும் ஒருவன் இரவில் வானத்தைப் பார்க்கும் போது அல்லது கடலைக் காணும் போது தன் மனதில் ஒருவித அமைதி நிலவுவதை அவர் உணரலாம்.
மேலும் பரந்து விரிந்துள்ள இப்பிரபஞ்சத்தில் தான் எவ்வளவு அற்பமானவன் என்கிற ஓர் உணர்வையும் அக்காட்சிகள்அவனுக்கு ஏற்படுத்தும். நதிகளில் தோன்றும் சிற்றலைகளின் மீது கதிரவனின் ஒளிக்கதிர்கள் புரியும் ஜாலங்கள், பச்சைநிற வயல்கள். குரங்குகளின் சேட்டைகள், பசுக்கள் காட்டும் அன்பு முதலியவை மறக்க முடியாதவையாகும்.

பலரும் வெறுக்கும் பூச்சிகளிடம், நமக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு எவ்வளவோ பாடங்கள் உள்ளன. இயற்கை. நாம் அனுபவிப்பதற்காக, இலவசமாகக் கிடைக்கும் ஓர் அற்புதமான காட்சியாகும்.
பலர் இதைப் புறக்கணித்துவிட்டு ஆபாசமான திரைப்படங்களைப் பார்ப்பதிலும், கீழ்த்தரமான திரைப்படப் பாடல்களின் இசையைக் கேட்பதிலும் மதி மயங்கி அவற்றிற்காக நேரத்தையும் பணத்தையும் பெருமளவில் விரயம் செய்து தங்கள் உள்ளங்களைக் களங்கப்படுத்திக்கொள்வது மிக விசித்திரமாக இருக்கிறது” என வருத்தப்பட்டார்கள்.
இன்று சிறுவயதிலேயே சந்நியாசம் ஏற்று சிருங்கேரி சாரதா பீடத்தில் 35 வது குருவாக விளங்கிய அபிநவவித்யாதீர்த்த சுவாமிகளின் 32வது ஆராதனை நாள். எல்லா உயிர்களிடத்திலும் மிகுந்த கருணையோடும் பக்தர்களுக்கு சிறந்த அருளுரைகளையும் வடநாட்டில் பல சிறுகிராமங்களில் திக்விஜயம் செய்து தர்மபிராசரமும் செய்து அருளிய மகான் ஆவார்.


