
- கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவில் உயர்ந்து, ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை சென்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30%-50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்காவில் 50% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புச் சுமை குறைக்கப்படுவதுடன், நுகர்வோருக்கு நேரடி விலை உயர்வு தாக்கம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி குறிபிட்டுள்ள தகவல்: பிரதமர் மோடி அரசுக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. மற்ற நாடுகளைப் போலவே இந்திய மக்களுக்கான எரிபொருள் விலைகளை கடுமையாக உயர்த்துவது அல்லது சர்வதேச சந்தை மாற்றங்களிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசின் நிதியில் சுமையை ஏற்பது.
ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக அரசின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்திய மக்களை பாதுகாக்க அரசின் நிதியில் சுமையை ஏற்கும் முடிவை மீண்டும் எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் விலை உயரும் நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பெரிய இழப்புகளை (பெட்ரோலுக்கு சுமார் லிட்டருக்கு ₹24 மற்றும் டீசலுக்கு ₹30) குறைக்கும் வகையில், அரசு தனது வரிவசூலில் பெரிய அளவில் இழப்பை ஏற்றுள்ளது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.




