
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர மாசி ஆராட்டு உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. இந்த ஆண்டு ஆராட்டு உற்சவத்தில் பங்கேற்க யானைகளிடையே ஓட்டப் பந்தயம் நடத்தி முதலாவதாக வந்த ஒற்றை கொம்பன் என பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோகுல் என்ற 33 வயதான யானை தேர்வு செய்யப்பட்டது.இந்த யானை உற்சவத்தில் சுவாமி கிருஷ்ணன் விக்ரகத்தை சுமந்து பவனி வரும்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். திருவிழாவின் முதல் நாளில் யானைகள் ஓட்டப்பந்தயம் நடைபெறும். இதற்காக தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளில் இருந்து குலுக்கல் முறையில் 5 யானைகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த யானைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் கோவில் முன்பு தொடங்கியது. இதில் கோகுல் என்ற 33 வயதான யானை முதலிடம் பிடித்தது. யானைகள் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த கோகுல் யானைக்கு ஒரு தந்தம் இல்லை. ஒரு விழாவில் பங்கேற்ற போது தென்னை மரத்தில் இருந்து ஓலை விழுந்ததில் யானையின் ஒற்றை தந்தம் முறிந்தது.

இதனால் பக்தர்கள் இந்த யானையை ஒற்றை கொம்பன் யானை என்றே அழைப்பார்கள்.தற்போது இந்த யானைக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. குருவாயூர் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது. 10 நாட்களும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவுக்கான மொத்த செலவு ரூ.3.22 கோடியாகும். உற்சவம் நடைபெறும் நாட்களில் குருவாயூர் கிருஷ்ணனுக்கு வழக்கமான பூஜைகளுடன் உற்சவபலி பூஜை உற்சவபலி தரிசனம்,ஸ்ரீபூதபலி இறுதி நிகழ்ச்சியாக சுவாமிக்கு ஆராட்டு நடைபெறும்.





