spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பெருமாளுக்கு உகந்த புரட்டாசி..

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி..

- Advertisement -
IMG 20230918 140601

மாதங்களில் நான் மார்கழி என்றார் மஹாவிஷ்ணு ஆனால் வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் பக்தர்கள் பலருக்கும் கேள்வி எழுகிறது.

இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.

வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.

மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான்.

காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது. – அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான்.

இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.

தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார்.

மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது. மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன்.. இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது.

மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன். தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார்.

பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். . மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், அந்த பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும். என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன். அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கானா எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதார உணர்ந்து விட்டான்.

இப்போது உங்களுக்கும் புரிகின்றதா? இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது. இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,898FollowersFollow
17,300SubscribersSubscribe