
“ஏஷ தர்ம: சனாதன:” – இந்த வாக்கியம் நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அடிக்கடி பேசப்படும் வாக்கியம். “இது சனாதன தர்மம்” என்பது இதன் பொருள். புராதனமாக காணப்பட்டாலும் நித்ய நவீனமாக விளங்குவது சனாதனம். கால எல்லைகளுக்கு வளையாத சாசுவத தர்மம் சனாதனம். சூரியோதயம், சந்திரோதயம் போல என்றும் புதுமையாக விளங்குவது. நித்திய ஞானம் சனாதனம்.
“தாரணார்த்தர்ம மித்யாஹு:” என்பது விளக்கம். பற்றுவது தர்மம். விருக்ஷத்திற்கு வேர் பற்றுதல். வேரினால் விருட்சம் நிற்கிறது, வாழ்கிறது, வளர்கிறது. அதேபோல் வாழ்க்கை என்னும் விருட்சத்திற்கு வேர் தர்மம். மனித வாழ்வு உய்வடைவதற்காக, நிறைநிலை பெறுவதற்காக தர்மத்தை போதித்த நூல் வேதம்.
எனவேதான் “வேதோகில தர்ம மூலம்” என்று சகல சாஸ்திரங்களும் வேதத்தை தலையில் தாங்குகின்றன. கட்டாயம் அனுசரிக்க வேண்டிய சொல்லை “வேதவாக்கு” என்று கூறும் வழக்கம் உள்ளது.
“பிரத்யக்ஷேணானுமித்யேவ யஸ்தூபாயம் சபுத்யதே I
யேனம் வின்தன்தி வேதேன தஸ்மாத் வேதஸ்ய வேததா II”
மகரிஷிகளின் தவத்தில் உதித்த எல்லையற்ற ஞான குவியல் வேதம். வேத தர்மத்தை வாழ்க்கை நடைமுறைக்கு எடுத்துவந்து அனைத்து மக்களும் கடைபிடிக்கும்படியாக போதித்தவை ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள்.
பௌதீகவாதமும், பிரத்யக்ஷவாதமும் சாஸ்வத சத்தியத்தை நிரூபிக்க இயலாதவை. புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வைக்கு பரமார்த்தம் தன்னைத்தானே பிரத்யக்ஷமாக காட்டியருளும். அந்த பரமார்த்த சாஸ்திரமே வேத விஞ்ஞானம். இது தவத்தால் சித்தியான, இந்திரியங்களுக்கு அதீதமான சக்தியால் கேட்கப்பட்ட திவ்ய சப்தம். ஆதலால் ஸ்ருதி என்றழைக்கப்படுகிறது.
வேதங்கள் கூறும் தர்மங்களை தேச காலத்தை அனுசரித்து எடுத்துரைத்தவையே ஸ்மிருதிகள். ஸ்மிருதிகள் அந்தந்த காலங்களில் ருஷிகள் ஏற்படுத்தியவை. இவற்றையே தர்ம சாஸ்திரம் என்கிறோம். அதன்பின் இதிகாசங்களும், அஷ்டாதச (18) புராணங்களும்.
“இதிஹாசம்” என்பதற்கு “இவ்விதம் ஹா! நிச்சயமாக நடந்தது!” என்று பொருள். நடந்தது நடந்தபடியே இதிகாசத்தில் கூறியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இதிகாசங்கள் முக்கியமாக ராமாயணமும் மகாபாரதமும். இவற்றுள் வால்மீகி மகரிஷி எழுதிய இராமாயணம் காவிய சம்பிரதாயத்தை அனுசரித்து வந்த இதிகாசம். மகாபாரதம் ஒரு புராண, ஸ்மிருதி சம்பிரதாயத்துடன் காவிய குணங்களையும் அணைத்து கொண்ட மகா இதிகாசம். சனாதன தர்மம் இந்த நூல்களில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் என்பதற்கு முக்கிய ஆதாரங்கள் சுருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள்.
“ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்” என்று கூறி நாம் ஆச்சார்ய குருவை வணங்குகிறோம். சுருதி, ஸ்ம்ருதி, புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை போதிப்பவரே ஆச்சாரியர் என்பது இதன் கருத்து.
இதிகாச புராணங்கள் மூலம் வேதம் பரவலாக அறியப்படுகிறது. இதிகாச புராண ஞானம் இல்லாதவர்கள் வேதத்திற்கு அர்த்தம் கூறினால் வேதமாதா, தன்னைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று வருந்துவாள்.
வேதங்களோடு கூட தன்னலமற்ற மகான்கள் நடந்து காட்டிய தர்மத்தோடு கூடிய வாழ்க்கையும் சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் ஆகின்றன.
“மஹாத்மா ஏவ கத: ஸபந்தா” – “மகாத்மாக்கள் நடந்ததே நம் வழி!” விஸ்தாரமான தர்மத்தை வாழ்வில் கடைப்பிடித்து காட்டியவர்கள் மகனீயர்கள். நம் நாட்டு தர்ம வாழ்க்கை ஒரு புறம் வேத புராண இதிகாச நூல்கள் மூலமாகவும் மறுபுறம் மகாத்மாக்களின் ஆதர்ச மயமான வாழ்க்கை மூலமாகவும் தெளிவாக நம்மை வழிநடத்துகின்றன.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


