
ஒரு சிறந்த மனிதன் உருவாக வேண்டுமென்றால் பெற்றோரின் பங்கு அதில் நிறைய உள்ளது என்பதை நம் நாட்டு வேதக் கலாச்சாரம் எடுத்துரைக்கிறது.
பெற்றோரிடம் பவித்ர எண்ணங்கள் இருக்கவேண்டும். தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் விதம், அவர்கள் இருவரிடையே இருக்கும் அன்பு, சுத்தமான நடத்தை, பரிசுத்தமான மனம் இருக்குமானால் பிறக்கும் குழந்தைகள் சிறப்பாக உருவாகுவார்கள்.
இதன் தொடர்பாக ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. ஒருமுறை இலட்சுமணனிடம் ராமச்சந்திர மூர்த்தி கேட்டார்,
“புஷ்பம் த்ருஷ்ட்வா பலம் த்ருஷ்ட்வா I
த்ருஷ்ட்வா ச நவ யவ்வனம் I
ஏகாந்தே காஞ்சனம் த்ருஷ்ட்வா I
கஸ்ய நோ விசலேன் மன: II”
கேள்வி எத்தனை உயர்வாக உள்ளதோ பாருங்கள்!
“ஒரு அழகான பொருளைப் பார்த்தாலும் அழகிய இளமையான பெண்ணை பார்த்தாலும் பொன்னையும் செல்வத்தையும் பார்த்தாலும் ஏகாந்தத்தில் அதாவது தனியாக இருக்கும்போது…. காந்தா, காஞ்சனம்… போன்ற மனிதனை ஆகர்ஷிக்கக்கூடிய பொருட்கள் கண்ணில்பட்டால் யாருடைய மனம் கிளர்ச்சியடையாமல் இருக்கும்?” என்று கேட்கிறான் ராமன்.
தயங்காமல் உடனே லட்சுமணன் பதிலளிக்கிறான். “யாருடைய தாயார் பதிவிரதையாக இருக்கிறாளோ, யாருடைய தந்தை தார்மீக வழியில் நடப்பவராக இருக்கிறாரோ அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அற்பமான ஈர்ப்புகளுக்கு அடிமையாகாமல் மனக்கட்டுப்பாட்டோடு தர்மத்தில் நிலைத்து நிற்பார்கள்” என்று பதிலளிக்கிறான் லட்சுமணன்.
இதன்மூலம் கணவன் மனைவியின் நடத்தை எவ்விதம் உத்தமமான பிள்ளை பிறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பது புரிகிறது. ஏனென்றால் வெறும் இரு ‘உடல்கள்’ சேர்வதால் பிறக்கும் ‘உடல்’ அல்ல சந்தானம் என்பது. உள்ளங்களின் சேர்க்கையால் உண்டாகும் உள்ளமே சந்தானம்! இதனை அறிய வேண்டும்.
அதனால் அவர்களிடையே பரஸ்பர பாவனை உத்தமமான அன்போடு கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல் பவித்ரமான உள்ளம் மிகவும் அவசியம். இங்கு பவித்திரம் என்று கூறும்போது இடம், காலம் இவற்றைக் கூட மனதில் கொள்ளவேண்டும். சரியான புனிதமான நேரம், புனிதமான இடம், புனிதமான மனம் இம்மூன்றும் இணைந்தால் தான் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
தீய காலத்தில் கணவன் மனைவி ஒன்று சேரும் போது துஷ்ட புத்திரர்கள் பிறப்பார்கள் என்பதை நம் புராணங்கள் கூறுகின்றன.
கணவனும் மனைவியும் துஷ்ட காலத்தில் ஒன்று சேர்ந்ததால் உலகை பயமுறுத்தும் ராக்ஷஸர்கள் பிறந்தார்கள் என்ற கதையை புராணத்தில் கூறியுள்ளார்கள். இவையனைத்தையும் சிந்தித்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஜனன சாஸ்திரங்களில் இன்னும் பரிசோதனைகள் நடத்த வேண்டுமென்றால் புராணக் கதைகளை இன்னும் தீர்க்கமாகப் படித்தறிய வேண்டும்.
ஒரு ஜீவியின் உற்பத்தியின் பின்னால் வெறும் இரண்டு உடல்களின் சேர்க்கை மட்டுமே அன்றி ஒன்றாக இணைந்த நேரம், இடம், மனநிலை இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அம்சம் இங்கு தெரியப்படுத்தும் முக்கியமான விஷயம்.
அதனால்தான் நம் ருஷிகள் தர்மசாஸ்திரத்தில் கூறியுள்ள பண்பாட்டிற்கு உதாரணமாக புராணங்களில் நிறைய கதைகளை எடுத்துக் கூறியுள்ளார்கள். சந்தியா காலத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்ததால் அப்போது பிறந்த புத்திரர்கள் அசுரர்களாகி உலகிற்கு தீங்கு விளைவித்தார்கள் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் புராணங்களில் அனேக இடங்களில் காணப்படுகின்றன.
நல்ல எண்ணம், நல்ல நடத்தை கொண்ட தர்ம மயமான வாழ்க்கைமுறை பெற்றோரில் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் அதேபோல் உருவாகுவார்கள். இல்லாவிடில் அதர்ம வழியில் நடக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள். அதனால் என்ன நிகழும் என்றால் அநீதியும் ஊழலும் தலைவிரித்தாடும் சமுதாயம் உருவாகும்.
மூலத்தில் தர்மம் இல்லாத போது பலனில் தர்மம் எப்படி இருக்கும்? தர்மத்தை மறந்து, நீதி நியமங்களை விட்டுவிட்டு சுயநலமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பெற்றோர், சமுதாயத்தில் தர்மம் நிலைபெற வேண்டும் என்று எதிர்பார்த்தால் எவ்வாறு சாத்தியப்படும்? அதனால் பெற்றோருடைய நடத்தை நல்ல பண்பாட்டுடன் தர்மவழியில் இருக்க வேண்டும். இதனை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதேபோல் பெற்றோரிடம் பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்று பத்மபுராணம் மிக அழகாக விளக்கியுள்ளது. பிரத்யக்ஷ தெய்வங்கள் தாய் தந்தையரே!
பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல விதமாக முன்னேற வேண்டுமென்றால் பெற்றோரிடம் பக்தி கௌரவத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தெய்வங்கள் கூட அநுகூலமாகி அருள் புரிவார்கள் என்று பத்ம புராணம் தெரிவிக்கிறது.
“சர்வ தீர்த்தமயீ மாதா சர்வதேவ மஹி பிதா I
மாதரம் பிதரம் தஸ்மாத் சர்வ யத்னேன பூஜயேத் II
-இது பத்ம புராணத்தில் உள்ள வாக்கியம்.
“சர்வ புண்ணிய தீர்த்தங்களின் சொரூபம் அம்மா! சகல தெய்வங்களின் சொரூபம் அப்பா! அதனால் தாய் தந்தையருக்கு கௌரவம் அளித்து வணங்க வேண்டும். அவர்களை கஷ்டத்துக்குள்ளாக்காமல் ஆதரிக்க வேண்டும்” என்று மிக உயர்ந்த விஷயங்களைக் கூறியுள்ளளர்கள்.
ஏனென்றால் தாயும் தந்தையும் எத்தனையோ சிரமங்களுக்கிடையில் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்து உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரிடம் அந்த பிள்ளைகளும் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பெற்றோர் உயிரோடு இருக்கும் போது அவர்களின் நலனுக்காகவும் அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் முயற்சிப்பவர்களே உண்மையான பிள்ளைகள் என்ற அம்சத்தை வலியுறுத்திக் கூறுகின்றன நம் சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும்.
“மாத்ரு தேவோ பவ I பித்ரு தேவோ பவ I” என்ற இரண்டு வாக்கியங்களில் மீது இதிகாச புராணங்கள் பல விஷயங்களை நமக்கு அளிக்கின்றன.
“மாதரம் பிதரம் சைவ யஸ்து குர்யாத் பிரதக்ஷிணம் I
பிரதக்ஷிணீ கருதா தேனா சப்த த்வீபா வசுந்தரா II”
தாயையும் தந்தையும் தெய்வங்களாக வணங்கி பிரதட்சிணம் செய்பவர் ஏழு தீவுகளைக் கொண்ட பூமியை முழுவதும் சுற்றி வந்த புண்ணியத்தை பெறுகிறார். தாய் தந்தையர் சர்வ லோக சொரூபர்கள். அதனால் அவர்களை சுற்றி வந்து வணங்கினால் விஸ்வம் மொத்தத்தையும் சுற்றி வந்ததிற்குச் சமம்.

கணபதி தன் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை பிரதட்சணம் செய்ததில் கூட இதை உட்பொருளை நமக்கு காட்டுகிறார்கள். இந்தக் கதையின் மூலம் பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறார்கள்.
தெய்வங்களைப் போலவே வணங்க வேண்டியவர்கள் பெற்றோர். பெற்றோரை வணங்கும்போது பாதம், முழங்கால், சிரம் மூன்றும் பூமியை தொடும் வகையில் விழுந்து கும்பிட வேண்டும். அவ்வாறு வணங்குபவர்கள் அக்ஷயமான புண்ணியங்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நமக்கு மகான்களின் வாழ்க்கை வரலாறுகள் பல காணப்படுகின்றன.
தாய் தந்தையர் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் பின்னர் தாமும் சிறந்த பெற்றோராக உருவாகுவார்கள்.
பெற்றோர் தர்மவழியில் நடப்பதன் மூலம் உத்தமமான இளைஞர்களை உருவாக்க முடியும் என்று எடுத்து விளக்கிய மகரிஷிகளின் சூட்சுமப் பார்வைக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ ஸாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


