“சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்.
எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.
(சுங்கச் சாவடி சோதனை சம்பவம்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-74
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பல வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டில் அரிசித்
தட்டுப்பாடு நிலவியிருந்தது. அதனால், மாவட்ட
எல்லையில் சுங்கச் சாவடி அமைத்து, அரிசி
கடத்தலைத் தடுக்க முயன்றது அரசு. எல்லையைக்
கடந்து, வேறு மாவட்டத்துக்குள் செல்பவர்களின்
உடைமைகளைப் பரிசோதனை செய்த பின்னரே
போவதற்கு அனுமதித்தார்கள், சுங்கத்துறைப்
பணியாளர்கள்.
அந்த சமயத்தில், காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்கு
யாத்திரையாகப் போனார்கள் பெரியவாள்.
காஞ்சிபுரம் – வேலூர் (அப்போது செங்கல்பட்டு –
வட ஆற்காடு) மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல
வேண்டும்.அங்கே ஒரு சுங்கச் சாவடி இருந்தது.
வழக்கம்போல, பெரியவாளுக்கு முன் செல்லும்
ரிக்ஷாவில்,பெரியவாளின் தண்ணீர்ப்
பாத்திரமான கடம்.மடிசஞ்சி,ஒரு குடம்,விபூதி,ஒரு
சின்ன மூட்டையில் நெற்பொரி முதலியன வைக்கப்
பட்டிருந்தன. சுங்கச்சாவடி தடுப்பு வேலியருகே,
ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னார்கள்
பெரியவாள்.
“சாமான்களை நன்றாகப் பரிசோதிச்சுக்கோ.
பொரி எடுத்துக் கொண்டு போகலாமா, கூடாதான்னு
தெரியல்லே. அரிசி மாதிரி இதுவும் நெல் சம்பந்தப்
பட்டதுதான்.பொரி கொண்டு போகக்கூடாதுன்னா….
மூட்டையை இங்கேயே போட்டுடறேன்.கவர்ன்மென்ட்
சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான். எனக்குன்னு
விதிவிலக்கு கிடையாது”-பெரியவாள்.
சுங்கச்சாவடி அலுவலர்கள்,அப்படியே பிரமித்துப் போய்
நின்றார்கள்.
குழந்தையைப் போல, என்ன எளிமை!
என்ன சட்ட பரிபாலனம்!
“சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள்.
அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி. பொரி
எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை.
பெரியவா ரிக்ஷாவுக்குச் சோதனை கிடையாது”
என்று விநயமாகக் கூறினார்கள்.சுங்கத்துறை அலுவலர்கள்.
அதன் பின்னரே, யாத்திரை தொடர்ந்தது.


