

பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல் துவங்குவதையொட்டி டிசம்பர் 16ல் திருபாவரணம் ஐயனுக்கு சார்த்தும் விழா நடைபெறும்.உற்சவத்தை யொட்டி வரும் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை நடைபெறுகிறது..
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா மார்கழியில் நடைபெறுகிறது.. முதல் நாள் 16-12-22 வெள்ளிக்கிழமை அன்று திருஆபரணபெட்டி ஊர்வலம். 17-12-22 சனிக்கிழமை 1ம் திருவிழா அன்று திருகொடியேற்றம். தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்ஷவபலி பூஜை. 7,8 ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல். 9 ம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறும். மறுநாள் 27-12-22 அன்று மண்டல பூஜை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அச்சன்கோயில் மார்கழி ஆராட்டு உற்சவத்தில் முக்கிய விழாவாக ஒன்பதாம் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.கேரளாவில் இரு கோயில்களில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் கோயில், அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.
அச்சன்கோயில் மற்றொரு சிறப்பு சபரிமலை போல் இங்கும் சொர்ண கொடிமரத்தில் கொடியேற்றி பத்துநாள் ஆராட்டு உற்சவம் நடைபெறும்.கடைசி இருநாட்களில் பள்ளி வேட்டை ஆராட்டு நடைபெறும்.

அச்சன்கோயில் மற்றொரு முக்கிய சிறப்பு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க திருபாவரணங்கள் உள்ளது போல் அச்சன்கோவில் அரசனுக்கு தங்க திருபாவரணங்கள் எடையே சரியான அளவில் பார்க்க முடியாத தங்கவாள் மந்திரி கருப்பசாமிக்கு வெள்ளி திருபாவரணங்கள் உள்ளது சிறப்பம்சமாகும்.
உற்சவத்தில் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று காலை 10 மணி அளவில் ( பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து 10 இருந்து 11 மணிக்குள் ) விளக்கு வைத்தல் எனும் சுவாமி புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் வெளிபிரகாரத்தில் நிறுத்தப்பட்டு நடை அடைக்கபடும். மேல்சாந்தி ஸ்ரீகோவிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து உள்பிரகாரத்தில் அதற்கன அமைக்கபட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருள செய்வார்கள். அப்போது உள்பிரகாரத்தில் கோவில் பணியாளர்கள் உற்ஷவபலி பூஜை கட்டளைதாரர்கள் மற்றும் மிக முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். பின் மரபாணி கொட்டி எல்லா உப தெய்வங்களையும் அழைத்து சுவாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கபடும். மடபள்ளியில் பாகம் செய்யபட்ட அரிசி சாதத்தினால் படைத்து கொண்டே இருப்பார்கள்.. பின் தாந்தரிகம் மூலம் கேட்டு கேட்டு போதும் என்று வரும் வரை மீண்டும் மீண்டும் வைத்து கொண்டே இருப்பார்கள்.. இது சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடரும். பின் எல்லா தெய்வங்களுக்கும் படைத்து முடிந்ததும் வெளிபிரகாரத்தில் இருக்கும் பக்தர்களை உள்ளே அனுமதித்து.. சுவாமிக்கு தீபாரதணை நடைபெறும். பின் இதே போல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கு இதே போல் படைக்கபடும்.. தொடர்ந்து 3 மணி வரை 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கபட்டு கடைசியாக மூன்று சுற்று ஓடி தூவி படைத்து.. உற்ஷவபலி பூஜையை நிறைவு செய்து ஸ்ரீகோவில் நடை திறந்து சுவாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள்.
இந்த பூஜை மிகவும் விஷேசமான பூஜை ஆகும். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் தான் நடைபெறுகிறது. இந்த பூஜையை செய்வதும், இந்த பூஜையில் கலந்து கொள்வதும், இந்த பூஜையை பார்ப்பதும் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அந்த ஒரே நாளில் அந்த ஒரே பூஜையில் ஐயப்பன் உட்பட அனைத்து தெய்வங்களையும் அழைத்து நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை செய்வதால் எல்லா தெய்வங்களுக்கும் எல்லாம் படைத்து எல்லா பூஜைகளும் செய்ததாக ஐதீகம் நிலவுகிறது.
