திருப்புகழ் கதைகள் : சக்ரத்தை பத்மத்தை கையில் கொண்ட மாயன்!

வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைய வேண்டும்.

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி 346
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்
நத்தத்தைச் சக்ரத்தை பத்மத்தை கையில் கொண்டுள்ள பொருமாயன்

     ஸ்ரீமந் நாராயணன் தனது திருக்கரங்களிலே நத்தத்தை, சக்கர்த்தை, பத்மத்தை வைத்திருக்கிறார் என அருணகிரியார் இத்திருப்புகழில் கூறுகிறார். நத்தம் என்றால் சங்கம்; சக்ரம் என்பது சுதர்சனச் சக்கரம்; பத்மம் என்றால் தாமரை மலர். பெருமாள் இவையத்தனையும் தனது திருக்கரங்களில் தரித்திருக்கிறார். பகவான் பஞ்சாயுதங்களை தனது திருக்கரங்களில் தரித்திருக்கிறார் என நாம் அறிவோம்.

     உலகில் பிறந்த அனைவருக்கும் கடமைகள் கண்டிப்பாக இருக்கும். அதேபோல் பகவானின் பாஞ்சாயுதங்களுக்கும் கடமைகள் உண்டு. பகவான் அவதரிப்பதற்கு முன் பஞ்சாயுதங்கள் அவதரிப்பார்கள். பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்கள். அதர்மம் மிகவும் அதிகமாக இருக்கும் போது தான் பகவானே நேரடியாக அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவார். இது ஒவ்வொரு யுகத்திலும் இது சுழற்சி போல நடக்கும்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்

यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।

अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்

தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।

धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥

     “எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூருகிறார்.

     பகவானின் ஒரு சிறு அம்சமே பஞ்சாயுதம் என்றாலும் பகவானுக்கு இருக்கும் அதே சக்தி இவர்களுக்கும் உண்டு. அனைத்தும் பகவானுக்குள் அடக்கம். பஞ்சாயுதங்களை வழிபடுவதால் பகவானை நெருங்கும் பாக்யம் நமக்கு கண்டிப்பாக கிட்டும்.

சுதர்சன சக்கரம்

     தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தை நாம் போற்றி வணங்குதல் வேண்டும். சுதர்சனத்தை சக்கரத்தாழ்வார் என்றும் அழைப்பர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

     சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

     சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். சுவாமி தேசிகன் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண எனப் போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.

     சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வலக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் – சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்கனி, மிஸ்கிரிசம், வேல் ஆகியன. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் – பாஞ்சசன்யம், சாரங்கம், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

பாஞ்சஜன்யம்

     மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைய வேண்டும்.

     பாஞ்சஜன்யம் பற்றி மேலும் சில செய்திகளை நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.