“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”” (நேற்று 16-03-2015 பொதிகை டிவி,யில்) தினமும் காலை 7 மணிக்குஇந்திரா சௌந்திரராஜன் காஞ்சி பெரியவர் பற்றி உரையாற்றுவார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிடும்போது. ‘பெரியவாள் தன் ஞாபக சக்தியை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்த சம்பவம் நிகழப்படவில்லை. ஒரு சதாவதானி கூட இதை சொல்ல முடியும் . முத்தாய்ப்பு ஒன்று வைத்தாரே!-‘ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே’அதுதான் ஹைலைட். அது நமக்காக,) தொகுத்தவர்-டி,எஸ்.கோதண்டராம சர்மா. முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும், தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி. பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள். கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள். பெரியவாள் கேட்டார்கள்: “இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?” “ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.” “கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…” “அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…” “ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…” “ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…” “அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?” “சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…” “எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?” “ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..” “வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?” “புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..” “ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தையே…நடக்கிறதா?” “கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…” கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை! கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள். அப்போது பார்த்தது, கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ? பாட்டி சொன்னாள், “பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….” பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போலே, ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தவர்களையெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்! “ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…” மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை? கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?
“ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…””
Popular Categories


