
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முக்கிய கோவிலாக அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது
கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில், மண்டல பூஜையையொட்டி மகோத்சவ திருவிழா டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெற்றது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. எட்டாம் திருநாளில் எட்டாம் பூராம் நிகழ்வும் நடைபெற்றது.
ஒன்பதாம் திருநாளான இன்று டிசம்பர் 25 கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. கேரளாவில் இரு கோவில்களில் மட்டுமே தேரோட்டம் நடைபெறும் ஒன்று பாலக்காடு கல்பாத்தி விசுவநாதர் கோயில் இரண்டாவது அச்சன்கோவில் ஆகும்.
இந்த ஆண்டு அச்சன்கோவில் நடந்த தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தமிழகம் கேரளாவில் இருந்து பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. பத்தாம் நாள் விழாவில் வெள்ளி கிழமை முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.
தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மதியம் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை பரவசப்படுத்தியது.




