
காஞ்சித் தலம் ஐயங்கார் குளம்
முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மையானது காஞ்சிபுரம். இங்கே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அநேகம். நாயன்மார்களால் பதிகங்கள் பாடப்பெற்ற ஆலயங்களும் அதிகம்.
பழங்காலத்தில் சிறப்புறத் திகழ்ந்தது தொண்டை மண்டலம். அதன் சிறப்பைப் பறை சாற்றுவது பல்லவர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த காஞ்சி மாநகரம். பட்டுக்கு மட்டுமல்ல பக்திக்கும் புகழ்பெற்ற தலம் இந்தக் காஞ்சிபுரம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணப்பதுபோல் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் அதே ஆன்மிக மணம் கொண்டு திகழ்கின்றன.
அத்தகைய திருத்தலங்களில் ஒன்றுதான் அய்யங்கார்குளம் என்ற திருத்தலம். இது, காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் தென்புறத்தில் இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது.
அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே கோயில் கொண்ட அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை சஞ்சீவிராயர் என்று போற்றி வணங்குகிறார்கள். அழகான கற்றளிக் கோயில் இது.

கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்களுடன் கூடிய கோபுரம் மூலவர் விமானம் மூன்று சுற்று பிராகாரங்கள்…ப்உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள் வெளிபிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள் வடக்கு வாயில் கோபுரம் என அழகிய வடிவமைப்பு. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு மிக அழகாகக் காட்சி தருகிறது இந்தக் கோயில்.

கி.பி. 1541 முதல் 1614 வரை விஜயநகரை ஆட்சி செய்த வேங்கடபதியின் அவையில் அமைச்சராக இருந்தவர் லட்சுமிகுமார தாததேசிகர். இவர் ஒருமுறை தலயாத்திரை செய்துவந்தபோது இங்கே திருடர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த திரவியங்களைக் கொள்ளை அடித்தனர். உடனே லட்சுமிகுமார தாததேசிகர் அந்த இடத்தில் அமர்ந்து அனுமனை நினைத்து அனுமந்தஸ்ரீ என ஒரு ஸ்தோத்திரத்தைக் கூறினார். அடுத்த நிமிடம் திருடர்களுக்கு கண் பார்வை பறிபோனது. பயந்துபோன திருடர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டினர். பிறகு, தங்களிடம் இருந்த பொருட்களையும் சேர்த்து தாததேசிகரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்றனர். தன்னிடம் இருந்த பொருள்செல்வத்தையும் சேர்த்து தாததேசிகர், இங்கே ஆஞ்சநேயருக்கு அழகான இந்தக் கோயிலைக் கட்டினார்.

மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்த ஆலயத்தின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தையும், 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபத்தையும் காண்கிறோம். ஆலயத்தின் உள்ளே செல்லும் முன், அஞ்சனை மைந்தனின் பூரண அருளைப் பெற்றுச் செல்லவேண்டும் என்பதற்காக அனுமனைப் போற்றும் 20 ஸ்லோகங்களை கல்வெட்டுகளில் வடித்து அர்த்த மண்டப வெளிச்சுவரின் பொறித்து வைத்துள்ளனர்.
இங்கே மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருநாமம் ஸ்ரீசஞ்சீவிராயர் என்பது. வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். அண்டி வந்தவருக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் அழகுக் கோலம். தான், தாசரதியான ராமபிரானின் தாசானுதாசன் என்பதால், அயோத்தி இருக்கும் வடக்குத் திக்கைப் பார்த்தபடி இருகரம் கூப்பிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீசஞ்சீவிராயர்.

ராம&ராவண யுத்தத்தின்போது, இந்திரஜித் விடுத்த கொடிய அஸ்திரத்தால் மூர்ச்சையடைந்த லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்ததாம். அதில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவர் இங்குள்ள சஞ்சீவிராயர் என்கிறார்கள். இந்தக் கோவிலுக்கே உரிய சிறப்பான அம்சங்கள் சிலவும், இந்தக் கோயிலின் பெருமையைப் பறை சாற்றுகின்றன… அவை… தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோவில் … இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு என்று அமைந்திருப்பது… அதுவும், ராஜகோபுரம் உள்ள அனுமனின் தனிக்கோயில் என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

இந்த ஆலயத்தின் அர்த்த மண்டப மேற்கூரைகளில் உள்ள கருங்கல் வளையங்கள், சிற்பக் கலை நயத்தை நமக்குக் காட்டுகின்றன. ஆயினும், சிற்பங்கள் சில சிதிலமடைந்து காணப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமி நன்னாளில் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீ வரதராஜப் பெருமான் இந்த ஆலயத்துக்கு எழுந்தருள்கிறார். இங்கே திருமஞ்சனம் கண்டு, இங்குள்ள நடவாவி திருக்கிணற்றுக்கும் எழுந்தருள்கிறார் ஸ்ரீவரதராஜர்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மூல நட்சத்திர நாளிலும் ஸ்ரீசஞ்சீவிராயப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தியான மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய அனுமனின் தரிசனம் சகல தடைகளையும் நீக்கி, சகல நலன்களையும் வாரி வழங்கும் அழகு தரிசனமாகும்.

முற்காலத