
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி – இந்தியா திரில் வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன்
என்ன ஒரு விருவிருப்பான ஆட்டம். அதுவும் புவனேஷ்குமார் வீசிய அந்த 19ஆவது ஓவர் மிகவும் பிரமாதம். 18ஆவது ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 12 பந்துகளில் 29 ரன் எடுக்க வேண்டியிருந்தது. நிக்கோலஸ் பூரன் 62 ரன்னோடும், பொவல் 51 ரன்னோடும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
19ஆவது ஓவரில் புவனேஷ்குமார் 4 ரன்கள் கொடுத்து நிக்கோலஸ் பூரனின் விக்கட்டை எடுக்கிறார். எனவே 20ஆவது ஓவர் வீச வரும் ஹர்ஷல் படேலுக்கு 6 பந்துகளில் 25 ரன் கொடுக்காமல் வீச வேண்டும் என்பது இலக்காகிறது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஒற்றை ரன் கொடுக்கிறார். எனவே அடுத்த நான்கு பந்துகளில் 23 ரன் எடுக்க வேண்டும்; அதாவது தொடர்ந்து நாலு சிக்சர் அடிக்க வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகள் சிக்சருக்குப் பறக்கின்றன. இந்திய அணி வீரர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கும் இதயம் வெளியே வந்து விழுந்திருக்கும்; அத்தனை வேகமாகத் துடித்திருக்கும். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளிலும் இரண்டு ஒற்றை ரன்கள் கொடுத்து ஹர்ஷல் படேல் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தார். முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. விராட் கோலி இன்று நன்றாக விளையாடினார். அவர் 52 ரன் எடுத்தார்.
ரிஷப் பந்த் (28 பந்துகளில் 52 ரன்) வெங்கடேஷ் ஐயர் (18 பந்துகளில் 33 ரன்) இருவரும் அதிரடியாக ஆடினர். அதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 186 ர்ன் எடுத்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் மெதுவாக ஆடினர்.
ஆனால் நிக்கோலஸ் பூரன் (41 பந்துகளில் 61 ரன், 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) மற்றும் ரொவ்மன் பாவல் (36 பந்துகளில் 68 ரன், 4 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு டி20 அரையிறுதி ஆட்டத்தை நினைவுபடுத்தினர்.
(அந்த ஆட்டத்தில் இந்திய அணி 192 ரன் எடுத்திருந்தது; ஆனால் இரண்டாவதாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன் எடுத்து வென்றது).
ஆனால் இந்திய அணியின் அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களின் திறமையால் அணி வெற்றி பெற்றது. இத்துடன் இந்தத் தொடரையும் வெற்றி பெற்றுள்ளது.




