ஐபிஎல் 2022 – 3 ஏப்ரல் 2022 பஞ்சாப் vs சென்னை
பஞ்சாப் சென்னையை வென்றது
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஏப்ரல் மூன்றாம் நாள் சென்னை பஞ்சாப் அணிகளுக்கிடையே மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் ஐ.பி.எல்லின் 11ஆவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது ஓவரில் பானுகா ராஜபக்ஷே ஆட்டமிழந்தார். டாஸ் வென்றதற்கான பலன் கிடைத்துவிட்டது. ஆட்டம் நம் கைக்கு வந்துவிட்டது என சென்னை ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் நடந்தது வேறு. ஷிகர் தவானும் (24 பந்துகள், 33 ரன், 4 ஃபோர், 1 சிக்ஸ்) லிவிங்ஸ்டோனும் (32 பந்துகள், 60 ரன், 5 ஃபோர், 5 சிக்ஸ்) இன்று முதன் முறை விளையாடும் விக்கட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மாவும் (17 பந்துகள், 26 ரன், 3 சிக்சர்கள்) அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர்.
கிட்டத்தட்ட 200 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசி ரன் ரேட்டைக் குறைத்தார்கள். இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது. 181 என்பது சென்னை அணியின் பேட்ஸ்மென்களைப் பொருத்த வரையில் எளிமையான இலக்கு.
வெற்றி நிச்சயம் என்று நினைத்திருந்த வேளையில் சென்னை அணி பவர்ப்ளே ஓவர்களில் தடுமாறியது. சென்ற ஐபிஎல்லில் ஆரஞ்சு தொப்பி வாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது முறையாக ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக அதிரடியாக ஆடிகொண்டிருக்கும் ராபின் உத்தப்பா 13 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மொயின் அலி ரன் எதுவும் எடுக்கவில்லை. ரவீந்தர் ஜெதேஜாவும் பூஜ்யத்தில் அவுட்டானார்.
தடுமாறிக் கொண்டிருக்கும் அணிக்கு மற்றொரு அடியாக அம்பாடி ராயுடுவும் 13 ரன்னில் அவுட்டானார். அப்போது ஸ்கோர் 36/5. ஷிவம் துபேயும் (50 ரன், 30 பந்துகள், 6 ஃபோர், 3 சிக்ஸ்) தோனியும் (23 ரன், 28 பந்துகளில்) கொஞ்சம் நம்பிக்கை அளித்தனர்.
அதன் பின்னர் ராகுல் சாஹர் சுழலில் சிக்கி அணி 18 ஓவரில் 126 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. சென்ற முறை சாம்பியன்ஷிப் வென்ற அணி முதல் மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.
பஞ்சாப் அணியின் புதிய, முதல் முறை ஆடும் ஆட்டக்காரர்கள் ஜித்தேஷ் ஷர்மா, வைபவ் அரோரா இருவரும் நன்றாக ஆடினார்கள். ஷாருக் கான் நேற்றைய பொட்டியிலும் சொதப்பிவிட்டார்.