
குஜராத் vs பஞ்சாப்
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஏப்ரல் எட்டாம் நாள் குஜராத் பஞ்சாப் அணிகளுக்கிடையே மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 16ஆவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கட் இழப்பிறகு 189 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி கொண்டது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. ஹர்திக் பாண்ட்யா தனது முதல் ஓவரில் மாயங்க் அகர்வாலை அவுட்டாக்கினார். தொடர்ந்து நான்காவது முறையாக சொற்ப ரன்னில் அகர்வால் ஆட்டமிழக்கிறார். அதன் பின்னர் ஜானி பெயிர்ஸ்டோவும் ஐந்தாவது ஓவரில் அவுட்டானார். ஆனால் அதன் பின்னர் ஷிகர் தவானும் (30 பந்துகளில் 35 ரன்) லிவிங்க்ஸ்டோனும் (27 பந்துகளில் 64 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
லிவிங்க்ஸ்டோன் 15.3ஆவது ஓவரில் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 153. தமிழக வீரர் ‘ஷாருக் கான்’ நேற்று இரண்டு சிக்சர்கள் அடித்தார்; ஆனல் அதற்கு மேல் சரியாக ஆடவில்லை. கடைசி நேரத்தில் ராகுல் சாஹாரும் (14 பந்துகள், 22 ரன், 2 ஃபோர், 1 சிக்ஸ்) அர்ஷதீப்பும் (5 பந்துகள் 10 ரன்) அணியின் ஸ்கோரை 189/9க்குக் கொண்டுவந்தனர்.
கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யா பந்து கைக்கு வராமலேயெ ஒரு ரன் அவுட் செய்தது மூன்றாவது அம்பயரால் நிராகரிக்கப்பட்டது.
குஜராத் அணி விளையாடத் தொடங்கியபோது அதன் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்னொரு முனையில் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் 35 ரன் அடித்தார். இந்த ஆட்டம் அவருக்கு முதல் ஆட்டமாகும்.
இவ்வளவு பிரமாதமாக குஜராத் அணி விளையாடியும் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. அந்த சமயத்தில் பாண்டியா முதல் பந்தில் அவுட்டானார். இரண்டாவது பந்தில் திவாத்தியா ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் மில்லர் ஒரு நான்கு அடித்தார். நாலாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுக்கப்பட்டது.
இப்போது ஆட்டத்தை வெல்ல இரண்டு சிக்சர்கள் தேவைப்பட்டன. ஓடியன் ஸ்மித் பந்து வீசிக் கொண்டிருந்தார். ஐந்தாவது பந்தை திவாத்தியா சிக்சுக்கு அடித்தார்; அது அங்கே இருந்த ஃபீல்டர் ஒருவர் கிட்டத்தட்ட கேட்ச் பிடித்தார்; ஆனால் பந்தோடு எல்லைக் கோட்டிற்கு வெளியே விழுந்துவிட்டார்; அதனால் அது சிக்ஸ் ஆகிப்போனது.
அடுத்த பந்தை லாங்-ஆன் பகுதியில் தூக்கி அடித்தார்; அதுவும் சிக்ஸ் ஆகியது. குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு கைக்கு எட்டிய வெற்றிக் கனி வாய்க்கு எட்டவில்லை.




