இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் ஆட்டம், கௌஹாத்தி, 10.01.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்திய அணி (373/7, விராட் கோலி 113, ரோஹித் ஷர்மா 83, சுப்மன் கில் 70, ராகுல் 39, ஷ்ரேயாஸ் ஐயர் 28, ரஜிதா 3/88) இலங்கை அணியை (306/8, தசுன் ஷனகா 108*, நிசாங்கா 72, தனஞ்சயா 47, உம்ரான் 3/57, சிராஜ் 2/30) 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் சேர்த்திருந்த போது, சுப்மன் கில் (70) விக்கெட்டை இழந்தார். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் குவித்தார். ஸ்ரேயஸ் ஐயர் (28), கே.எல் ராகுல் (39) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (14) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மிக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். விராட் கோலிக்கு இது 73வது சதமாகும். அதே போல் கிட்டத்தட்ட 1100 நாட்களுக்கு பிறகு விராட் கோலி இந்திய மண்ணில் அடிக்கும் சதமும் இது தான்.
போட்டியின் 49வது ஓவர் வரை இலங்கை வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்த விராட் கோலி, 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 373 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதுஷான்கா, ஷனாகா, கருணாரத்னே மற்றும் டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இலங்கை அணி ஆடவந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் இரண்டு விக்கட்டுகள் விரைவாக வீழ்ந்தன. ஃபெர்னாண்டோ (5 ரன்), குசால் மெண்டிஸ் (ரன் எடுக்கவில்லை) ஆகியோர் ஆட்டமிழந்தபின்னர் நிசாங்கா அசல்ங்காவுடனும் (23 ரன்) தனஞ்சயாவுடனும் (47 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை சரிவிலிருந்து மீட்டார். அதன் பின்னர் 25ஆவது ஓவரில் விளையாட வந்த இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா (ஆட்டமிழக்காமல் 108 ரன்) இந்திய வெற்றியை தாமதப்படுத்தினார்.
வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்குரியதாகவே இருக்கிறது. கௌஹாத்தி மைதானம் பீட்டர்களுக்குச் சாதகமானது; இரண்டாம்பாதியில் பனிப்பொழிவு இலங்கை அணிக்குச் சாதகமாக இருந்தது என்று காரணங்கள் சொன்னாலும் பந்துவீச்சு இன்னும் நன்றாக இருக்கவேண்டும்.