ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 42–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
டோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2–வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் பிளே–ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.
10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும்.



