டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.
இதன்படி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-2-வது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12-ந் தேதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு உண்டு.
இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.
இந்த மோதலில் வெற்றி பெறும் அணி, நத்தத்தில் நாளை இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடையும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.