உலக துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் குர்பிரீத் சிங் வெள்ளி வென்றார்

Published:

04 Sep 15 kurpeeth singh - 2026

52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்தது.

இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பந்தயத்தில் 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் குர்பிரீத் சிங் 579 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் பாவ்லோ கோரோஸ்டைலோவ் (581 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், தென்கொரியா வீரர் கிம் ஜூன்ஹோங் (579 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்திய வீரர்கள் அமன்பிரீத் சிங், விஜய்குமார் ஆகியோர் முறையே 25–வது மற்றும் 26–வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தனர். இதன் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், அமன்பிரீத் சிங், விஜய்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4–வது இடமே பிடித்தது.

ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் விஜய்வீர் சித்து 572 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தென்கொரியா வீரர் லி குன்ஹியோக் (570 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், சீன வீரர் ஹாஜி ஹூ (565 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகள் பிரிவில் விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,695 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தென்கொரியா அணி (1,693 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கத்தையும், செக்குடியரசு அணி (1,674 புள்ளிகள்) வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

இந்த போட்டியில் சீனா 20 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா 11 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கம் வென்று 2–வது இடத்தையும், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கம் வென்று 3–வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

Related articles

Recent articles

spot_img