சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிக்கும் குணசேகரன் , செல்வி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களை படிக்க வைக்க கார்பென்டர் வேலைக்கு சென்ற தந்தை, குடும்பத்தின் வறுமையை போக்கினார்.
காலம் செல்ல செல்ல, முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களோ திருமணத்திற்கு பின்னர் மனைவியோடு தனிக்குடித்தனம் சென்று விட்டனர். மூன்றாவது மகனுடன் வாழ்ந்து வந்த தம்பதி, கொரோனாவால் வேலையில்லாமல் தவித்து வந்தனர்.
மூன்றவாது மகன் ஸ்ரீதர் மதுவிற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளார். குணசேகரனுக்கு வேலை இல்லாததால் செக்யூரிட்டி வேலைக்கு சென்று வந்தார்.
ஆனால் ஸ்ரீதரோ எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு பணத்தை எடுத்து சென்று மது வாங்கி குடித்துவிடுவார். ஊதாரித்தனமாக சுற்றிய மகனால் கையில் காசு இல்லாமல் அடுத்த வேளை கஞ்சியில்லாமல் பசியால் தம்பதியினர் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், தம்பதியினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கைப்பற்றிய கடிதத்தில், எங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, எங்களுடைய சடலங்களுக்கு மூன்று மகன்களும் கொல்லி வைக்க கூடாது , காவல்துறை தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என எழுதியுள்ளனர்.
மூன்று மகன்களை பெற்றும், எந்த ஆதரவும் இல்லாமல் உயிர் மாய்த்துக்கொண்ட தம்பதிகளை காவல்துறையினர் இறுதி சடங்கு செய்தனர்.
கடைசி காலத்தில் பெற்ற தாய் தந்தைக்கு கஞ்சி ஊற்றாத மகன்களை நினைத்து வாழ்க்கையை வெறுத்த தம்பதியினர், சாவுக்கு கொல்லி வைக்க கூடாது என உருக்கமாக கடிதம் எழுதி உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.