கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அரசு பள்ளி ஆசிரியை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் கங்காணி தெருவில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுஜித், ரித்திகா என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மோகனாம்பாள் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதன் பிறகு இருவரையும் சமாதானம் செய்து வைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோகனாம்பாளை தனது கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற பழனிவேல் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அதன்பின் பாப்பம்பட்டி வனப்பகுதியில் மறுநாள் காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததும், வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து காயம் இருந்ததும் மர்மநபர்கள் யாரோ அவரை கடத்தி சென்று கொலை செய்ததை உறுதிபடுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஜம்புணதபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பழனிவேல் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில்பழனிவேலின் மனைவியான மோகனாம்பாளுக்கு இதில் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததால் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதோடு அவரை கொலை செய்த கூலிப்படையையும் போலீசார் சுற்றிவளைத்து விட்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பழனிவேலுக்கு மோகனாம்பாளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கண்டித்துள்ளார். இதனால் வாடகை வீட்டிற்கு சென்ற மோகனாம்பாள், பின் அவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறி குழந்தைகளுடன் வந்துள்ளார்.
அதன் பின்னரே பழனிவேல் கொலை செய்யப்பட்டதால் திட்டமிட்டு தனது கணவரை மோகனாம்பாள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஆனாலும் விசாரணை முழுவதுமாக முடிவடைந்த பின்னரே உண்மையான காரணங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.