நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைக்க, அடுப்பை சானிடைசர் ஊற்றி பற்றவைத்து சிறுவன் உடலில் தீப்பற்றி உயிரிழந்த பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது.
நாம் சிறார்களாக இருக்கையில் நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறை நாட்களில் அல்லது கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு செல்லும் போது, அனைவரும் கூட்டாக சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவோம்.
ஒருவரின் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், பாத்திரம் என அனைவரும் உற்சாகமாக சமைத்து சாப்பிட்டு இருப்போம்.
இந்நிலையில், கூட்டாஞ்சோறு சமைக்க முயன்ற சிறுவன் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டுப்பேட்டை காமராஜ் நகர் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன்.
இவருக்கு ஸ்ரீராம் (வயது 13) என்ற மகன் இருக்கிறார். ஸ்ரீராம் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளான். சிறுவன் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளான்.
இதனையடுத்து, கூட்டாஞ்சோறு சமைக்க அடுப்பை பற்றவைக்க சானிடைசரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்துள்ளான். இதன்போது, சிறுவனின் மீது எதிர்பாராத விதமாக தீப்பிடிக்கவே, சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடி துடித்துள்ளான்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விரைந்து சென்று சிறுவனை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முயன்ற சிறுவன் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.