
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க பலர் தயாராகி வருகின்றனர். இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வழங்கியுள்ளது.
அதன்படி நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்றும், நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீச்சல் குளத்திற்கு அனுமதி கிடையாது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போதையில் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அதிகமான மது போதையில் இருக்கும் நபர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு தினத்தில் சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பைக் ரேஸ் நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ‘உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளோம். புத்தாண்டு தினத்தில் மெரினாவில் பொதுமக்கள் கூட தடையில்லை. மக்கள் கூட்டத்தை கண்காணிக்க அதிநவீன இரவு நேர டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை காமராஜர் சாலையில் ரிசர்வ் வங்கி முதல் கலங்கரை விளக்கம் வரை மாலை 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
கடற்கரை பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீல் வைக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.




