திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி நாகஜோதி வயது 24 கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக நாகஜோதியின் குடும்பத்தினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை உடையாபட்டியில் உள்ள ஒரு கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக மணப்பாறை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இறந்தவர் மாயமான நாகஜோதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி நாகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் இது கொலையா? அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இறந்த இளம்பெண் உடையாபட்டியில் நிறுத்தி விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை காவலதுறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.