ஆட்சியாளர் களுக்கு… மகா பெரியவரின் அறவுரைகள்!

Published:

kanchi mahaperiyava
kanchi mahaperiyava

ஒருசிலரின் மத எல்லைக்குள் புகுந்து அதன் விதிகளை மாற்றுவது, மற்ற மதங்களைத் தொடாமல் விடுவது என்று செயல்பட்டால் அது பாரபட்சமானது. அவ்வாறு செயல்படுவது, ஜனநாயகக் குடியரசு என்பதன் அடிப்படையான ‘குடிமக்கள் அனைவருக்கும் சம நீதி வழங்குதல்’ என்ற கொள்கையை அரசாங்கமே முறியடிப்பது போல் ஆகிவிடும்.

***

மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முழு நிர்வாகப் பொறுப்பும், சட்டப்படி முழுமையான அதிகாரமும் கொண்ட சுதந்திரமான ஓர் அமைப்பை (autonomous body) ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். மத விஷயங்களில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த அமைப்பின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.

***

சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முக்கியமான ஹிந்துத் தலைவர்கள் ‘சமரஸம்’ என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு மிகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டே போனார்கள். இதன் விளைவாக, இன்று ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் நமது தேசத்தைப் பிளந்து அதன் ஒரு பகுதியைத் தங்களது தனி நாடாக ஆக்கிக் கொள்ளுமளவுக்கு அவர்கள் வன்மையில் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களோ, தங்களது நியாயமான உரிமைகளுக்குக்கூட அரசாங்கத்திடம் மன்றாடவும் போராடவும் வேண்டிய விபரீதமான நிலை இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

***

யாராக இருந்தாலும், மற்றவர்களிடம் முதற்கண் அன்பால் பரஸ்பர நல்லிணக்கம் கொள்ள முயல்வதே நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. அது பயன்தராத போதுதான் பிற வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அப்போது அதனை வலியுறவே செய்யலாம்.

***

பொய்ப் பிரச்சாரம், பலவந்தம், வசிய உபாயம் ஆகிவற்றால் மத மாற்றம் செய்வது பெரிய குற்றம். இந்தக் குற்றத்தையும் கொள்ளை, கற்பழிப்பு முதலிய குற்றங்களோடு சேர்த்து வைத்து முக்கியமான கவனம் தந்து தீர்க்கமான புலன் விசாரணை செய்தல் வேண்டும். ஒருவரது உள்ள உயர்வுக்கே ஊறு விளைவித்து, அவரது கொள்கை நோன்பைக் குலைப்பது கொள்ளை அடிப்பதற்கும் கற்பழிப்பதற்கும் இணையான குற்றமே.

எனவே, அதற்குரிய கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இத்தகைய குற்றங்களுக்கு deterrent punishment என்ற வகையிலான தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதாவது, தண்டனை பற்றிய அச்சத்தினாலேயே ஒருவர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடாதபடி தடுக்குமளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும்.

***

இத்தகைய மத மாற்றங்கள் நடைபெறும் வரையில் அவற்றுக்கு எதிர் நடவடிக்கையாகத் தாய் மதத்திற்கே மீண்டும் மதம் மாற்றுவதைக் குற்றமாகக் கருதாமல் அரசாங்கம் அநுமதிக்க வேண்டும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

***

பாரதம் மெய்யான சுதந்திர பாரதமாக இருக்கப்போகிறதா? அதாவது, ‘ஸ்வ’தந்திரம் என்பதை இந்த நாட்டுக்கென்றே சுயமாக ஏற்பட்ட வாழ்க்கை முறை என்ற உண்மையான பொருளில் கண்டு அநுபவிக்கப் போகிறதா? அல்லது மேற்கத்திய நாட்டினரிடம் அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்திய தேசம் என்னும் உடலுக்குள் அதே மேற்கத்தியர்களின் ஜீவனாக நம்மவர்களே விளங்கி, அதற்கேற்ற விதத்திலேயே சட்டதிட்டங்கள் செய்து, அவர்களது கொள்கை, வாழ்க்கை முறை ஆகிவற்றுக்கே இனியும் நாட்டின் ஆன்மா ‘பர’தந்திரப்பட்டிருக்கும் நிலைதான் வாய்க்கப்போகிறதா?

தற்போது காணப்படும் சூழல் இந்த விஷயத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

***

மிகப் பெரும்பாலான பிரஜைகளால் பின்பற்றப்படுவதும் – உலகின் அனைத்து மதங்களுக்கும் முற்பட்டதும் – ஏராளமான பிற மதங்களுக்கும் ஆதாரக் கொள்கைகள், சடங்குகள் ஆகியவற்றை அளித்துள்ளதும் – குறிப்பாக, பல்வேறு மதங்களும் ஒரே பரம்பொருளை அடைவதற்கான பல்வேறு வழிகள்தான் என்று பரந்த திருஷ்டியுடன் கூறி அவற்றின் உரிய வளர்ச்சிக்கு ஆதரவு தரும் ஒரே மதமாகத் திகழ்வதும் – எல்லாவற்றுக்கும் மேலாக, தான் விமரிசையாகக் கொடிகட்டிப் பறந்த பொற்காலத்திலும்கூட மத மாற்றத்தில் ஈடுபடாததுமான ஹிந்து மதத்தை சுதந்திர பாரதத்தின் State Religion என்பதாக – அரசாங்கத்தின் மதமாக – ஏற்பதில் மிகுந்த நியாயமிருப்பதாகக் கருதுகிறோம். இதனால் பிற மதங்களின் நியாயமான வளர்ச்சி ஒரு விதத்திலும் தடைப்படாது என்பது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

***

உண்மையை உணரும் அறிவு படைத்த மேன்மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை மனப்பூர்வமாக ஏற்று, மற்றவர்களையும் தட்டி எழுப்பும் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடவேண்டும் என வற்புறுத்துகிறோம். அரசியல் சுதந்திரத்திற்காக ஆர்வத்துடன் போராடத் தொண்டர் படை திரண்டது போலவே, நமது ஆன்மிகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கும் ஒரு சாத்துவிகப் படை திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்! இதற்கு உறுதுணையாக என்றும் உடன் நிற்குமாறு ஈசனையும் கூவியழைத்து வேண்டுகிறோம்.

– பூஜ்ய மகா பெரியவா

(தொகுப்பு: வேதா டி.ஸ்ரீதரன்)

Related articles

Recent articles

spot_img