
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
1939 ஆம் ஆண்டு ஜூலை 8–ஆம் நாள் சில ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார் சகோதரர்களுடன் பக்தி உணர்வோடு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து சொக்கநாதப் பெருமானின் அருளையும், மீனாட்சி அம்மையின் அருளையும் பெற்றார்கள் மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் சென்ற குழுவினர்.
தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் இச்சம்பவம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ வைத்தியநாத ஐயரை உலகம் போற்றி மகிழ்ந்தது! கடும் எதிர்ப்பை மீறி ஸ்ரீ வைத்தியநாத ஐயர் நடத்திய இப்போராட்டத்திற்கு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ஸ்ரீ ராஜாஜி, ஸ்ரீ வைத்தியநாதஐயர், ஸ்ரீ என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயப் பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு தேவர் அவர்கள் “என் சகோதரர்களான ஹரிஜன மக்கள், அன்னை மீனாட்சி கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னை மீனாட்சியை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார். ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939 காலை 10 மணிக்கு!
ஆங்கில அரசு இருந்த காலங்களில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் போக மறுப்பு இருந்தது சட்டத்தின் படி! ஹரிஜன மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலையும் இருந்தது.
இதனை அறிந்த இராஜாஜி அவர்கள் அன்றைய ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார். அதன்படி ஹரிஜன மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது.
அதற்குப் பிறகு தமிழகமெங்கும் ஹரிஜன மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் திரு வைத்தியநாத ஐயர் தலைமையில். ஸ்ரீ கக்கன்ஜி. ஸ்ரீ எல்.என். கோபாலசாமி, ஸ்ரீ முருகானந்தம், ஸ்ரீமுத்து, ஸ்ரீவி.எஸ்.சின்னையா, ஸ்ரீ வி.ஆர். பூவலிங்கம் முதலிய தலைவர்களும், விருதுநகர் ஸ்ரீ எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் மற்றும் சிலரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்..
இச்சம்பவத்தைக் குறித்து 22-7-1939 ஹரிஜன் இதழில் மகாத்மா காந்தி கீழ்க்கண்டவாறு எழுதினார்…
இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
8-7-1939 நம் சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத நாள்.