மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது.
இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் ஜூன் 2-வரை நடைபெறுகிறது. கோடை விழாவை அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 ஆடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம், புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு, சிங்சாங், ஸ்பைடர் மேன், 20 அடி நீளம் கொண்ட டைனோசர்,மயில் உள்ளிட்ட உருவங்களை மலர்களை கொண்டு அலங்கரித்துள்ளனர்.
மேலும் மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றுவதற்காக மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழுதாகும் வாகனங்களை சீரமைப்பதற்காக தனி குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இங்குள்ள இயற்கை எழிலை ரசித்தனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.










