நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு செல்லும் வழியில்… ஒரு ஷிர்தி ஆலயம்!

Published:

gyayiru pushparatheswarar temple - 2026
#image_title

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          சிறுவாபுரியில் இருந்து ஞாயிறு சூரியனார் கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டிய சாலையில் பயணித்தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் வயல்களுக்கு இடையே ஒரு சாயிபாபா கோயில் இருக்கிறது. அதுதான் ஆனந்த ஷிர்தி சாயி மந்திர். அந்தக் கோயிலை சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை கட்டி, வழிபாடு நடத்துகிறார். அவர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பொருளாதாரப் பாடம் எடுத்தவர். அவரைச் சந்தித்தால் மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார். எனவே அந்தக் கோயிலுக்குச் சென்றோம்.

          அது ஒரு அருமையான இடம். நாலுபுறமும் வயல்களால் சூழப்பட்டப் பகுதி. எல்லா சாயிபாபா கோயில்களைப் போல இங்கேயும் நாமே சாயி பகவானுக்கு ஆரத்தி காட்டலாம். மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும், நாங்களும் இந்த ஆரத்தியை மனப்பூர்வமாகச் செய்தோம். பின்னர் பிரசாதம் உண்டபின்னர் அங்கிருந்து ஞாயிறு சூரியனார் கோவிலுக்குச் சென்றோம்.

ஞாயிறு கோயில்

          ஞாயிறு கோயில் என்பது புஷ்பரதேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் சொர்ணம்பிகை உடன் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் வந்து இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி

          தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சுவர்ச்சுலாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சுவர்ச்சுலா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். நிழலுருவமாக வந்த பெண்ணின் பெயர் சாயா. எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தார்.

          அந்த ஜோதி, ஞாயிறு கிராமத்தில் ஒரு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது

தாமரையை வெட்டி கண்பார்வை இழந்த மன்னன்

          இந்த பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. அதோடு மன்னனும் பார்வை இழந்தான். தன் செயலுக்கு வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், ‘புஷ்பரதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சங்கிலி நாச்சியார்

          சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.

          மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். கோஷ்ட்டத்தில் அதாவது சுதை சிற்பமாக பல்லவ விநாயகர் தட்சணாமூர்த்தி காலபைரவர் கண்வமகரிஷி ஆகியோர் உள்ளனர். பல்லவ விநாயகரை வணங்கினால் பல் வலி தீருமென்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img