மதுரை சிம்மக்கல் சாரதா பள்ளியில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. வித்யா என்றால் கல்வி, வித்யாரம்பம் என்பது, கல்விக்கான தொடக்கத்தைக் குறிக்கும். எனவே குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் தொடக்க நிகழ்ச்சியாக, விஜயதசமி நன்னாளில், இது கோயில்களிலும் வீடுகளிலும் நடைபெறுகிறது. பெற்றோர் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து, தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கம்.
சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வம். கல்வி தெய்வமான சரஸ்வதி, மற்றும் ஆசிரியராகிய குரு ஆகியோருக்கு, மரியாதை செய்து, கற்றலைத் தொடங்க வேண்டிய நாள் இது. விஜயதசமி அன்று கோவில்களில் வைத்து, பச்சரிசியைக் கொண்டு அட்சரம் எழுதி, குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்கினால் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியில், பொதுவாக ஓம் எனும் மந்திரத்தை எழுதி, இந்தக் கற்றல் நிகழ்வு தொடங்கப்படுகிறது.
குழந்தைகள் தமிழ் எழுத்தை எழுதத் தொடங்கும்போது, ஓம் நமசிவாய என்றோ, ஓம் நமோ நாராயணாய என்றோ சொல்லித் தொடங்குகிறார்கள். பிறகு அ என்று எழுதக் கற்றுக் கொடுப்பது, வித்யாரம்பம் எனப்படுகிறது.
மதுரை சாரதா பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, குரு மூலம் உபதேசம் பெற்று, கல்வியில் மேன்மை அடையச் செய்வதற்காக, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர், விரலி மஞ்சள், பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, தாம்பாளம், குழந்தைக்கு மாலை, குரு தட்சிணை ஆகியவற்றைக் கொண்டு வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
நத்தம் பகுதி கோயில்கள், பள்ளிகளில் விஜயதசமியை
யொட்டி, எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி:
நத்தம்: விஜயதசமியை முன்னிட்டு, நத்தம் கோயில்கள், பள்ளிகளில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும், பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் முதல் உயிரெழுத்தான ‘அ’ வை குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத வைத்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘அ’ எழுத்தைத் தொடர்ந்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனர்.