
தமிழில், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பிப்.05 அன்று, பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய சக்தி வாய்ந்த உரையில், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்த பாரதம் குறித்த தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்போதெல்லாம், பார்த்தீர்களென்றால், காங்கிரசின் நமது நண்பர்களுக்கு, என் மீது சிறப்பான அன்பு பெருக்கெடுக்கிறது. அது விசேஷமான அன்பாகும். இன்று எனக்கு, பொறுப்பு கிடைத்திருப்பதால் மட்டுமல்ல பொறுப்பில் இல்லையென்றாலும் கூட, தேசத்திற்காகவே வாழ்வது என்பதை கற்றிருக்கிறோம்.
நாங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் களத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு ஆற்றல் அளித்து வருகிறோம். இது ஒரு தரப்பிலே, தேசத்தின் இளைஞர்களுக்கு வலுவான ஒரு களத்தை அமைக்கும் போது, இந்த காங்கிரஸ், மோதிக்குக் கல்லறை தோண்டும் பணியில் மும்முரமாக இருக்கிறது. அது மட்டுமா, கடைவிரித்து அன்பை விற்பவர்கள், மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷத்தை எழுப்புகின்றார்கள். இது என்னமாதிரியான அன்பை விற்கும் கடை, இங்கே தேசத்தின் ஒரு குடிமகனுக்கு கல்லறை தோண்டும் கனவு காணப்படுகிறது?
எந்த அரசியல் சட்டத்தில் இந்தப் பாடத்தை இவர்கள் படித்தார்கள், இதிலே தேசத்தின் ஒரு குடிமகனுடைய கல்லறை தோண்டுவது பற்றி எழுதப் பட்டிருக்கிறது? அரசியல்சட்டத்தின் அவமதிப்பு இல்லையா இது? மனித சமூகத்தின் அவமரியாதை இல்லையா இது? அதாவது ஒருவருடைய, பொதுவாழ்வினுடைய, கண்ணியத்தின் அவமதிப்பு இல்லையா இது? அவர்களுக்கு இது பற்றி எந்த வருத்தமும் கிடையாது. இதன்பிறகு அவர்கள் என்ன விளக்கம் அளிப்பார்கள் தெரியுமா? பிரதம மந்திரி மாநிலங்களவையிலும் அழுது கொண்டிருந்தார் என்பார்கள். இந்த மாதிரியான கேவலமான கலாச்சாரத்திலே ஊறித்திளைத்து வளர்ந்தவர்கள் இவர்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, எனக்கு இது ஒன்றும், எனக்கு இது பழகிப் போன ஒன்று தான். இரண்டாயிரத்தி, இரண்டிலிருந்து, எப்போது அவர்கள், எதிர்த்தரப்பில் இருந்ததிலிருந்தே, மேலும் 2004இலே அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, மேலும் 2014இலே நான் இங்கே ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே, கடந்த 25 ஆண்டுகளாகவே, பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரிலும் கூட, மோதி பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு கூட்டத்தொடரிலும் கூட, அதிலே, இந்த அவையிலே மோதியைத் திட்டித்தீர்க்காமல் இவர்கள் ஓய்ந்ததே கிடையாது. 25 ஆண்டுகள்!!! ஒருவர் என்னிடம் மோதிஜி உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றிக் கேட்டார். நான் தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன் என்றேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் மோதிக்கு ஏன் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்? இது வெறும் கோஷமல்ல. இவர்களுக்கு உள்ளே இருக்கும் வெறுப்பின் பிரதிபிம்பமாகும். அதன் வெளிப்பாடாகும். அது ஏன் இருக்கிறது என்றால், நாங்கள், 370 என்ற சுவரைத் தகர்த்துவிட்டோம். அதனால் தான், மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள். நாங்கள், வடகிழக்கிலே, குண்டுகள் துப்பாக்கிகள், பயங்கரவாதத்தின் நிழல் படிந்து இருந்ததே, அந்த வடகிழக்கிலே அமைதி-வளர்ச்சியின் பாதையைக் கடைப்பிடித்தோம். ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றி சிந்திக்கிறார்கள்.
பாகிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்கள் வீடுகளில் புகுந்து பதிலடி கொடுக்கிறோம். ஆகையால்தான், மோதிக்குக் கல்லறை தோண்டுவது பற்றிப் பேசுகிறார்கள். ஆப்பரேஷன் சிந்தூரை நடத்துகிறோம். இது அவர்களுக்கு வலிக்கிறது. ஆகையால் தான், இவர்கள் மோதிக்குக் கல்லறை தோண்ட நினைக்கிறார்கள். மாவோவாத பயங்கரவாதத்திலிருந்து, தேசத்துக்கு விடுதலை அளிக்கவேண்டி, தைரியமாகச் செயல்படுகிறோம்.
ஆகையாலே, மோதிக்குக் கல்லறை தோண்டத் துடிக்கிறீர்களா? மேலும், நேருஜி தேசத்திற்கு எதிராக, மிகப்பெரிய, அநியாயம் செய்திருந்தார். சிந்துநதிநீர் ஒப்பந்தம் விஷயத்திலே. அந்த சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை, நாங்கள் வீசியெறிந்து விட்டோம். என்ன இதற்காகவா, இதற்காகவா நீங்கள் மோதிக்குக் கல்லறை தோண்டும் கோஷம் எழுப்புகிறீர்களா?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் பிரச்சனையே வேறு. இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மோதி இந்த அளவுக்கு எப்படி வர முடிந்தது? இவர்களுடைய பரிதவிப்பு மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. அட வந்தது தான் வந்தார், ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறார்? ஆகையால் தான், இந்த கோஷம். அவர்களிடம் ஒரே ஒரு பாதை தான் மிச்சமிருக்கிறது மோதிக்குக் கல்லறை தோண்டுவது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். இவர்களுக்கு ஜனநாயகம், அரசியல்சட்டம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. இந்த பிரதம மந்திரி பதவி அவர்களின் குடும்பச் சொத்து என்பது அவர்களுடைய எண்ணம். அதிலே வேறுயாரும் அமரமுடியாது. இவர்களுக்குள்ளே இருக்கும் காழ்ப்பு அன்பை விற்கும் கடையிலே நிரம்பியிருக்கும் நெருப்பு இருக்கிறதில்லையா, அதனுடைய விளைவு தான் இது. ஆகையினால் தான், ஏன் யாரோ அமர்ந்திருக்கிறார்கள்? நம்முடைய பாட்டன் சொத்தில்லையா? ஆகையால் தான், மோதிக்குக் கல்லறை தோண்டுகிறீர்களா? கோஷத்தை அவர்கள், ஆவேசமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, காங்கிரசின் அரசகுடும்பத்துக்கு, தேசம் பல பத்தாண்டுகள்வரை சந்தர்ப்பம் அளித்திருக்கிறது. உங்களுக்குக் கொடுக்காமலில்லை. தேசம் உங்களிடமும் கூட, தன்னுடைய எதிர்காலத்தை ஒப்படைத்திருந்தது. ஆனால் நீங்களோ, ஏழ்மையை அகற்றுவோம் என்ற கோஷத்தை எழுப்பினீர்கள், குழப்பி விட்டீர்கள். செங்கோட்டையிலிருந்து, காங்கிரசின் ஒரு பிரதமரின் உரையிலே கூட, ஏழ்மையை அகற்றுவோம் கோஷம் எழுப்பப்படாமல் இருந்ததில்லை.
ஆனால் எந்த ஒரு பிரதமரும் ஏழ்மையை அகற்ற என்ன செய்தார்கள், அது ஒருமுறை கூட கூறப்படவில்லை. கோஷம் வெறும் வெற்று கோஷம் மட்டுமே. ஆனால், மோதி மேற்கொண்ட பாதை, ஏழைகளுக்கு அதிகாரப்பகிர்வு. ஏழைகளுக்கு அதிகாரமளித்தல். மேலும், நான் என் தேசத்தின் ஏழைகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் தாம், தேசத்தின் திட்டங்களை, புரிந்து கொண்டார்கள் ஏற்றுக் கொண்டார்கள், அதோடு தங்கள் வல்லமையை அதிகரிக்க முயன்றார்கள். நான் தேசத்தின் ஏழைகளுக்குப் பரணி பாடுகிறேன்.
அவர்கள் எங்களுடைய கொள்கைகளின் மீது நம்பிக்கை கொண்டு, எங்களுடைய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களும் கூட, தங்களையே அர்ப்பணிப்பதிலே எந்தக் குறையையும் வைக்கவில்லை. மேலும் 25 கோடி என்னுடைய ஏழைக்குடும்பச் சகோதரர்கள், ஏழ்மையைத் தோற்கடித்தார்கள். அவர்கள் தாங்களே, ஏழ்மையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன். என்னுடைய 25 கோடி நாட்டுமக்கள், ஏமாற்றத்திலே இருந்தவர்கள், தொலைவிலே ஒரு நம்பிக்கைக்கீற்றுத் தெரிந்தது, எழுந்து நின்றார்கள். மேலும் இன்று, எங்களோடு இணைந்து பயணிக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, இவர்கள் அமலாக்கம் பற்றிப் பேசி வந்தார்கள். நம்முடைய நாட்டிலே, பல்லாயிரம் நபர்கள், ரயில்வே கிராசிங்கிலே இறந்து போனார்கள். பள்ளிக்கூடப் பேருந்து, ரயில்வே கிராசிங்கில் செல்கிறது, 20-30 பள்ளிக் குழந்தைகள் இறக்கும் செய்திகள் வந்தன. ஆளில்லா ரயில் கிராசிங். இது ஒன்றும் செய்ய முடியாத அளவுக்குப் பெரிய வேலையில்லை. இந்த வேலையையும் நான் வந்து செய்ய வேண்டியுருந்தது. மேலும் நாங்கள், அனைத்து ஆளில்லா ரயில் கிராசிங்குகளையும் மூடி விட்டோம். இலட்சக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். ஆகையினாலே, ஆகையாலே மோதிக்குக் கல்லறை தோண்ட விரும்புகிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 2014க்கு முன்பாக, தேசத்திலே 18,000த்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலே, மின்சாரம் என்பதற்குப் பொருள்கூடத் தெரியாது. மின்சாரத்துக்கு கம்பிகள் உண்டு பல்பு உண்டு, அதில் இருக்கும் ஃபிலமண்ட் ஒளிவிடும் என்பது பற்றி அவர்களுக்கு சுத்தமாகத் தெரியாது. 18,000 கிராமங்கள், 2014ற்குப் பிறகு, நாட்டுமக்கள் எங்களுக்குப் பொறுப்பினைக் கொடுத்த போது, மின்சாரம் என்றால் என்ன என்பதே அறிந்திராத மின்சாரம் என்ற சொல்லைக்கூட அறியாத அந்த 18,000 கிராமங்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தோமே, அதற்காகவா, ஆகையால் தான் மோதிக்குக் கல்லறை தோண்டுவதைத் தவிர வேறு வழியேதும் உங்களுக்குத் தெரியவில்லை.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அப்படியும் ஒரு காலம் இருந்தது, தேசத்தில் மீண்டும் மீண்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இருந்தன, எல்லைப்புறங்களின் நிலைமை பற்றி அறிக்கைகள் வெளியாகின, தோட்டாக்கள் குண்டுகள் இல்லை, புல்லட்ப்ரூஃப் ஜாக்கட்டுகள் இல்லை, உறைபனியிலே நிற்க வேண்டியிருக்கிறது, ஆனால் காலில் அணிந்து கொள்ள காலணிகள் தேவை அவைகூட நம்மிடம் இல்லை. இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன.
நாங்கள், நாட்டின் இராணுவ வீரர்களுக்கு கஜானாவைத் திறந்து விட்டோம். தேசத்தின் இராணுவத்தினருக்கு என்ன தேவையோ அதை அளிக்க உறுதி பூண்டோம். ஆகையினால் தான், ஆகையால் வேறு எந்த வழியும் மிச்சமில்லை என்று நினைத்து, அடுத்து, மோதிக்குக் கல்லறையைத் தோண்டலாம், இந்த மீதமிருக்கும் பாதையில் செல்கிறார்கள்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஒருமுறை உத்திர பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர், நாடாளுமன்றத்திலே, உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அழுது விட்டார். மூளைக்காய்ச்சல் காரணமாக, குழந்தைகள், கணக்கேயில்லாத குழந்தைகள் இறந்து கொண்டிருந்தன. இவர்களுக்கு இது தோன்றவே இல்லை, இந்த மூளைக்காய்ச்சலிலிருந்து, நிவாரணம் பெற முடியும் என்ற விஷயம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, கண்களின் நோயான ட்ராகோமா, மக்கள் பிரச்சனைக்கு ஆளானார்கள் கண்பார்வை இழந்தார்கள். ஆனால் விஞ்ஞானம் முன்னேறியிருந்தது குணமாக்குதல் சாத்தியம். ஆனால் அவர்களால் செய்ய முடியவில்லை. நாங்கள் மூளைக்காய்ச்சலிலிருந்தும் நிவாரணம் அளித்தோம், ட்ராகோமாவிலிருந்து மக்களுக்கு குணமளித்து அவர்கள் பார்வையைக் காத்தோம். இவைதாம் வெற்றிகள், இவைதாம் புரிந்துணர்வோடு செயல்படுதல். சமுதாயத்திற்காக உயிர்வாழ்தல் என்ற உறுதிப்பாடு இது.
கணம்தோறும், இதயத்தூறும், சமூகத்திற்காகவே வாழ்ந்து மடியும் உணர்வு, தாகம், அது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான், மோதிக்காக கல்லறை தோண்டுகிறார்கள். இந்த மந்திரத்தின் துணையோடு பயணிக்கிறார்கள். இந்தக் கனவைக் கண்டுகொண்டு செல்கிறார்கள். ஆனால் பேச்சு என்னமோ ஜனநாயகம் பற்றியிருக்கும். அன்பை விற்கும் கடைக்கு, விளம்பரப் பதாகை கழுத்தில். பொதுவாழ்க்கையிலே இப்படியா நடந்து கொள்வது?
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இவர்களுடைய அரசாங்கம், ரிமோட்டில் இயங்கியது. என்னுடைய அரசாங்கமும் ரிமோட்டிலே இயங்குகிறது. 140 கோடி நாட்டுமக்கள் என்னுடைய ரிமோட்டுகள். 140 கோடி நாட்டுமக்களின் கனவுகள், 140 கோடி நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகள், தேசத்தின் இளைஞர்களின் உறுதிப்பாடுகள், இவற்றுக்காக நாங்கள் உயிர் வாழ்கிறோம். இவர்களுக்காக அரசாங்கம் நடத்துகிறோம். அதிகாரம் எங்களுக்கு சுகத்துக்கான பாதையல்ல. அதிகாரம் எங்களுக்கு சேவை செய்யும் வழி. முத்ரா திட்டத்தால், கோடானுகோடி பேருக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
சுயவேலைவாய்ப்புக்கு பலமளித்திருக்கிறது. காங்கிரஸ் என்றைக்குமே, ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தியதே இல்லை. இருந்த கொஞ்சநஞ்ச ஸ்டார்ட் அப்புகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இவர்களுடைய நிலைமை மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, தங்கள் வீட்டின் ஸ்டார்ட் அப்பைக்கூட, இவர்களால் தூக்கிவிட முடியவில்லை. ஆனால் எங்கள் ஆட்சியிலே இன்று, 2 இலட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் இருக்கின்றன.
எப்போது வெற்றி மீது வெற்றிகள், சாமான்ய மக்களுக்குப் புலப்படும் போது, இந்தநிலையில் பாருங்கள், இவர்களிடம் ஒரேபாதை தான் மிஞ்சியிருக்கிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம். ஆனால், அந்தக்காலத்தை நினைத்துப் பாருங்கள், பிஎஸ் என் எல் தொடர்பாக துணுக்குகள் பேசப்பட்டன. கேலிச்சித்திரங்கள் போடப்பட்டன. ஆனால் இன்று, சுதேசி 4ஜி அமைப்பை, நாங்கள் எழுப்பியிருக்கிறோம்.
5ஜியை உலகிலேயே மிக விரைவாக அமல்செய்யும் பணியை நாங்கள் செய்திருக்கிறோம். தகவல் தொலைதொடர்பின் புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம், புதிய எண்ணப்பாடு, இவற்றை நாங்கள் மேம்படுத்தினோம். ஆகையினால் தான், வலி, நாக்கில் வெளிப்படுகிறது, மோதிக்கு நாங்கள் கல்லறை தோண்டுவோம்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஏழைகளின் சேவை, இது எங்களுடைய பெரும்பேறாகும். 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் அளிப்பது, இதை வாழ்வின் பெருநிம்மதியாக நினைக்கிறேன். மின்சாரம்…. குடிநீர்….. எரிவாயு சிலிண்டர், கழிப்பறை வசதி, எனக்கு, என்ன படுகிறதென்றால் ஆம், இறைவன் எனக்கு, சரியான திசையில் பணியாற்றும் உத்வேகத்தை அளித்திருக்கிறான். முதன்முறையாக ஒரு கிராமத்துப் பெண் பெருமையோடு கூறுகிறார் ஆம், நான் லட்சாதிபதி தீதி ஆகியிருக்கிறேன். அதற்கு இன்னொருவர் கூறுகிறார், இந்த ஆண்டுக்குள்ளாக நானும் இலட்சாதிபதி தீதியாகி விடுவேன். யார் ஆகிவிட்டாரோ அவரிடம் கேட்டால், இல்லை ஐயா நான் அடுத்து கோடீஸ்வரி ஆவதில் ஈடுபட்டிருக்கிறேன்.
இது இந்த எண்ணத்தின் மாற்றம் தன்னம்பிக்கை அதிகரிப்பு இது தான் முக்கியம். இப்படியாக, கோடானுகோடி நாட்டுமக்களின் நல்லாசிகள் எந்த மனிதனிடம் இருக்கின்றனவோ, கோடானுகோடி தாய்மார்கள் சகோதரிகள் என்ற பாதுகாப்பு கவசம் இருக்கும் போது, எத்தனை கோஷங்களை வேண்டுமானாலும் எழுப்புங்கள், கல்லறையை உங்களால் தோண்ட முடியாது, இந்த தேசத்தின் சக்தி, ஆசிகள் வடிவிலான கவசம், தாய்மார்கள் சகோதரிகளிடம் என் பொருட்டு இருக்கும் உணர்வு, இந்த அர்ப்பணிப்பு உணர்வோடு, தாய்மார்கள் சகோதரிகளுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். யாருமே மதிக்காத அந்த மனிதர்களுக்கு, மோதி பூஜை செய்கிறேன். வணங்குகிறேன். அவர்களின் இந்த ஆசி தான், இவர்களை முள்ளாய் குத்துகிறது, கல்லறை தோண்டச் செய்கிறது.



