கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். நேற்றிரவு (வியாழக் கிழமை) இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடியை, ராஜபட்ச சந்தித்துப் பேசினார்.
நேற்று கொழும்பு சென்றடைந்த மோடியை விமான நிலையத்தில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இரு தினங்களும் இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தில் ராஜபட்சவை சந்திப்பது குறித்து திட்டமிடப்படவில்லை. என்றாலும் ராஜபட்சவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர், ராஜபட்சவின் ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடி இலங்கை வரும்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாகவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கடந்த 2015-ல் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு இந்திய அரசே காரணம் என பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது கூற்றை மெய்ப் படுத்தும் விதமாக, மோடிக்கு எதிராக ராஜபட்சவின் ஆதரவாளர்களும் அவ்வப்போது, கொம்பு சீவிக் கொண்டிருந்தனர். மோடிக்கு எதிரான மனநிலையை ராஜபட்சவின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
இருப்பினும் இந்த எதிர்ப்புக் குரலுக்கு திடீர் திருப்பமாக, அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு ராஜபட்ச அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டினார். மேலும் மோடி தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அவரின் இத்தகைய மாற்றம், இலங்கை அரசியலில் மீண்டும் இந்தியத் துணையுடன் கோலோச்ச எடுக்கும் நடவடிக்கையா, அல்லது உண்மையான மனமாற்றம் தானா என்று பேச்சு எழுந்துள்ளது.
ஆனால், மோடியைப் பாராட்டிப் பேசிய நிலையில்தான், ராஜபட்சவை மோடி சந்தித்தார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.