யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா புதிய பிரதமராக பாகோ எம்.பி. முஹைதீன் யாசினை நியமித்துள்ளார். இந்த நியமனத்தை இன்று மாலை அரசவைச் செயலர் அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் அறிவித்தார்.
அகோங், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தினர். தொடர்ந்து, இன்று அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தார்.
இதன் பின்னர், பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாகோ எம்.பி., டான் ஸ்ரீ முஹைதீன் யாசினை பிரதமராக நியமிப்பதாகக் கூறினார். மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (அ) மற்றும் பிரிவு 43 (2) (அ) ஆகியவற்றின் படி யாங் டி-பெர்டுவான் அகோங், முஹைதீனை பிரதமராக நியமித்துள்ளார் என்றார்.
பதவியேற்பு நாளை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறும் என்று அஹ்மத் ஃபாடில் தெரிவித்தார். “பிரதமரின் நியமன செயல்முறை தாமதப்படுத்த முடியாதது! ஏனெனில் நாட்டுக்கும் அதன் மக்கள் மற்றும் நாம் விரும்பும் நல்வாழ்வுக்கும் அரசாங்கம் தேவைப்படுகிறது… என்று கூறிய அவர், “இது அனைவருக்கும் சிறந்த முடிவு என்று பேரரசர் கருதினார். இதன் மூலம் மலேசியாவின் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என்று பேரரசர் நம்புகிறார்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, இன்று காலை லங்காவி எம்.பி. டாக்டர் மகாதீர் மொஹமது, தாம் அரசை அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் ஆதரவு இருப்பதாகக் கூறினார். இருப்பினும் பேரரசரின் இந்த உத்தரவு இன்று வந்துள்ளது. பக்காடான் ஹரப்பன் மற்றும், வாரிசனும் மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பின்னரும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.