இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூன் இறுதியில் உச்சத்தை தொடலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. சில நிபந்தனையுடன் அனைத்து மண்டலத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் அதன் வீரியத்தை இப்பொழுது காட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு இனிமேல்தான் உச்சத்தை தொடும் என ஒரு ஆய்வு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த Indian Association For The Cultivation Of Science என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதில், ஜூன் மாத இறுதியில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேர், 220 பேருக்கு தொற்றை பரப்புவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக பரிசோதனை மற்றும் கடுமையான ஊரடங்கை கடைப்பிடிப்பதன் மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கலாம் என ஆய்வு பரிந்துரைக்கிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக, கொரோனா பாதிப்பு, உச்சத்தை தொடுவது, ஒரு மாதம் தள்ளிப்போவதால், இடைப்பட்ட காலகட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை ஏற்பாடு செய்ய வாய்ப்பாக அமையும் என ஆய்வு கூறுகிறது.