பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால், இந்தியா பாகிஸ்தான் இடையே சர்ச்சைக்குள்ள பகுதியில் சீன ராணுவம் களம் இறங்கும், அது காஷ்மீராகவும் இருக்கலாம் என்று சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் சில பகுதிகள், பூடான் நாட்டின் டோக்லாம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம், இதனை தங்கள் பகுதி என்று சொல்லி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவத்தின் செயலை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. பூடானும் சீனாவுக்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்பில் முக்கியப் பகுதியாகத் திகழும் சிக்கிமை ஆக்கிரமிக்க முயலும் சீன ராணுவத்தின் அடாவடித்தனத்தை இந்திய ராணுவத்தினர் ஓர் அரண் போல் நின்று முறியடித்துள்ளனர். மேலும் சீனா எத்தனையோ மிரட்டல்களை விடுத்த போதும், அந்தப் பகுதியில் இருந்து திரும்புவதில்லை என இந்திய ராணுவத்தினர் அறிவித்து விட்டனர். இதனால் வெறுத்துப் போயுள்ள சீனா, தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப சீன அரசு ஊடகமும் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
சிக்கிம் மாநில எல்லை அருகே உள்ள நிலப்பரப்பின் ராணுவ முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இந்தியா, அங்கிருந்து தனது ராணுவ வீரர்களை விலக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. அதுபோல சீனாவும் அங்கிருந்து பின்வாங்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறது. இந்நிலையில் டோங்லாங் எல்லை பிரச்னையில் இந்தியாவின் எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம் என சீனா அறிவித்தது.
இருப்பினும் சீனாவின் இத்தகைய நெருக்கடிகளுக்கு பதிலடியாக, டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நிரந்தரமாகத் தங்கும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு-பகலாக 24 மணி நேரமும் தங்கியிருக்க வசதியாக கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன. அதிலுள்ள வீரர்களுக்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து உணவு மற்றும் ராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரடி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டோக்லாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இருந்து சீன வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் மிக, மிக எளிதாக கண்காணிக்கும் வசதியையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். இதன் மூலம் சீனாவின் எத்தகைய மிரட்டலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவை மேலும் சீண்டும் விதமாகவும், இதுவரையிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை தாங்களே ஊட்டி வளர்த்தோம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாகவும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தானுக்காக காஷ்மீரில் மூன்றாவது நாட்டு ராணுவம் களமிறங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சிக்கிம் செக்டாரில் சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தும் பூடானுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் இந்தியாவின் அதே லாஜிக், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்குப் பொருந்தும் என திக்டாங்க் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில், சீன மேற்கு நார்மல் பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இயக்குநர் லோங் ஜிங்சுன், இதேபோல், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று காஷ்மீருக்குள் மூன்றாவது நாடு தலையிட முடியும் என கூறியுள்ளார். பூடான் பகுதியைப் பாதுகாக்க இந்தியாவுக்கு பூடான் கோரிக்கை விடுத்திருந்தால், இந்திய ராணுவம் பூடான் எல்லைக்குள்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னைக்குரிய பகுதியில் கூடாது” என லோங் ஜிங்சுன் கூறியுள்ளார்.
“இந்தியா கூறும் லாஜிக்கின் படி பார்த்தால், பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்னையில் உள்ள பகுதிக்குள் மூன்றாவது நாட்டின் ராணுவம் இறங்க முடியும்; அது, இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் உள்பட” என குளோபல் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது. இவ்வகையில் பார்த்தால், பாகிஸ்தானைத் தூண்டிவிட்டும், பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களுக்கும் துணை போகும் நாடு சீனா என்பதை வெளிப்படையாக அந்நாடு தெரிவித்து வருவதாகவே கருத இடமிருக்கிறது.


