உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், பல போட்டிகளில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர், இந்தத் தொடரில் முதல் நபராக 500 ரன்களைக் கடந்தவர், இந்தப் போட்டியில் தனியாளாக நின்று அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தவர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் சங்ககரா, தோல்வியடைந்த மனவருத்ததில் இன்று வெளியேறினார். இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதலில் விளையாடி அனைத்து விக்கெட்களையும் இழந்து 133 ரன் மட்டுமே எடுத்தது. இதில் 7 பேர் சுழற்பந்துக்கு ஆட்டமிழந்தனர். சங்ககரா மட்டுமே 45 ரன் எடுத்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவரில் வெற்றிக்குத் தேவையான 134 ரன்னை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து பெற்றது. இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக சங்ககரா முன்னர் அறிவித்திருந்தார். ஆனாலும் அவர் முதல் நபராக 500 ரன் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அணித் தலைவரும் ரசிகர்களும் கேட்டுக் கொண்டனர். இது குறித்து எந்த பதிலும் சங்ககரா கூறவில்லை என்றாலும், இன்றைய போட்டியில் அவர் ஒற்றை ஆளாக இலங்கையை நல்ல ஸ்கோர் எடுக்க வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் தோல்வியே கிடைத்தது.
வெற்றி நாயகனாக வலம் வந்தும் தோல்வியின் சோகத்தில் வெளியேறிய சங்ககரா
Popular Categories



