தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், இருப்பினும் உலகளவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் தொற்று பரவல் குறையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் இதில் அடங்கும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் உலக சுகாதார அமைப்பில் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், 4 சதவீதம் குறைவு என கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 28 சதவீதம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. லெபனான், துனிசியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளது.
உலகளவில் 2,40,63,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,23,560 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.