தமிழக மீனவர்களை சுடுவோம்: ரணிலின் கருத்துக்கு இலங்கை மீனவர்கள் வரவேற்பு

Published:

கொழும்பு: எல்லை தாண்டி வந்தால் மீனவர்களைச் சுட சட்டத்தில் இடமிருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தைத் தாங்கள் வரவேற்பதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க கூட்டமைப்பு சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பகுதியில் எல்லைமீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதில் தவறில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்வதையும், தமது கடல் வளத்தை அழிப்பதையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், இந்திய மீனவர்கள் விஷயத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தைத் தாங்கள் வரவேற்பதாகவும் அவர்கள்கூறியுள்ளனர். அண்மையில் யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் உள்ளுர் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கி, சிலரைக் காயப்படுத்தியதாகவும், அதை அடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு ஒரு கடுமையான நிலைப்பாடை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கவின் கருத்து கடுமையாக இருந்த போதிலும், நாட்டின் குடிமகன் என்ற வகையில் அதற்கு முரண்பாடான கருத்தைத் தங்கள் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்ட எமிலியான் பிள்ளை, இந்திய மீனவர்களை நீண்ட காலமாகவே எல்லை தாண்டி வரவேண்டாம் என்று தாங்கள் எச்சரித்திருந்தும், அவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இருநாட்டு மீனவர்களும் நடத்திய பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப நடந்து கொள்வதாக அளித்த உறுதிமொழியை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், திறந்த மனதுடன் பேச்சுக்களின் மூலம் ஓர் உடன்பாட்டுக்கு வர முடியும்; அவ்வாறு எட்டப்படும் முடிவை அவசியம் கடைப்பிடிக்க இந்திய மீனவர்களும், இந்திய அரசும் முன்வர வேண்டும் என்று அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img