லாகூர்: பாகிஸ்தானில் கிறிஸ்தவ சர்ச்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சர்ச்களில் கிறிஸ்துவர்களை மையப்படுத்தி இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள யுகானாபாத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான கிறிஸ்துவர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள கத்தோலிக்க சர்ச்சிலும், கிறிஸ்து சர்ச்சிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது தாலிபன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் இருவ
ர் இந்த சர்ச்களை குறி வைத்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 14 பேர் உடல் சிதறி பலியாயினர். இத்தகவலை அங்குள்ள ஊடகம் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாகூர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடித்ததும் பீதி அடைந்த பொதுமக்கள் உயிரைக் காத்துக் கொள்ள தப்பி ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறினர். இதனிடையே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான ஒரு இளைஞரை ஆத்திரமடைந்த சிலர் அடித்துக் கொன்றனர். அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
லாகூர் அருகே சர்ச்களில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: 14 பேர் பலி
Popular Categories


