ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 51 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு பிரேசிலில் உள்ள சண்டா கட்டாரினா மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அது மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 1300 அடி பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 32 பேர் பலியானதாக, முதல் கட்டத் தகவலில் போலீஸார் தெரிவித்தனர். உடனையாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு மீட்புக் குழுவினர் சென்றனர். விபத்து நடைபெற்ற பகுதி மரங்களும், புதர்களும் நிறைந்து காணப்பட்ட இடம் என்பதால், மீட்புக் குழு சம்பவ இடத்துக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 12 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் மேலும் 19 பேர் உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் கூறினர். இதனால் பலியானவர் எண்ணிக்கை 51 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த பஸ், அது சென்றடையும் ஜோன்வில்லே நகருக்கு 6 மைல் முன்னதாக இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த போது, சாலையும், பருவ நிலையும் நன்றாகத்தான் இருந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பஸ் பிரேக் பிடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும், இருப்பினும் விபத்துக்கான உடனடிக் காரணம் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
தெற்கு பிரேசில் மலைப் பகுதியில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி
Popular Categories


