
டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது; எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக அளவில் போட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க சட்டப்படி வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையைக் காரணம் காட்டி வரிகளை விதித்தார். இதற்கு அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டமான சர்வதேச அவசரநிலை பொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்க சட்டப்படி, வரிவிதிக்க பார்லிமென்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை.
நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறிய நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.




