சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை பயணம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இரு நாட்டு பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, மின்சாரம், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக – கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, இரு தரப்பு மக்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கொழும்பில் நடைபெறவுள்ள ஒன்பதாவது இரு நாட்டு கூட்டு ஆணையம் விவாதிக்கும். கொழும்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி இலங்கை அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரனுடனான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு
இலங்கைப் பயணத்தின் போது தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்க இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்த சுஷ்மா திட்டமிட்டுள்ளார். இதேபோல, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் விரும்பினார். ஆனால், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பதால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


