ஈஸ்டர் பண்டிகை நடக்கும் நேரத்தில், இலங்கையில் சர்ச்சுகள் குறிவைத்து தாக்கப் பட்டுள்ளன. இலங்கை கொழும்பு நகரின் 3 முக்கிய சர்ச்சுகள் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.
இலங்கையில் இன்று காலை 8.45க்கு மேல் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அங்கிருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள சர்ச்சுகள் மேலும் தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் தடுக்க, ஆயுதம் தாங்கிய போலீஸார் பல்வேறு முக்கிய சர்ச்சுகளுக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். போலீஸாருடன் ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு! இலங்கையில் பரவிய பீதி!
ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஆறாவது குண்டுவெடிப்பு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுவரை இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 160 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் போலீஸாருடன், சிறப்பு அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, ஈஸ்டர் பண்டிகை தினத்தை முன்னிட்டு, சர்ச்சுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் சர்ச்சிலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய சர்ச்சிலும் இரு பெரும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில்தான் பலர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த 300க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்த தானம் செய்யுங்கள்… இலங்கை அவசர அழைப்பு!
இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டவர்களுக்கு ரத்தம் அதிகம் தேவைப்படுவதால், ரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை, நீர்கொழும்பு மற்றும் நாரேன்பிட்டி ரத்த வங்கி மத்திய நிலையங்களுக்குச் சென்று, பொதுமக்கள் ரத்த தானம் செய்து இயன்ற வகையில் ஓர் உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.