ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அறிவித்துள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் இருந்த ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.