இது குழந்தைத் தனமானதா என்ன?

Published:

rahul gandhi - 2026

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*

       
*— ஆர். வி. ஆர்*

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது பொதுவெளியில் அசட்டுத்தனமாக ஒரு கேள்வியை இரு முறை எழுப்பி இருக்கிறார் – வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நோக்கி.

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா அது பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்தது’ என்று ஜெய்சங்கர் சொன்னதாக வைத்துக் கொண்டார் ராகுல் காந்தி. அதன்படி அவர் தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார். ராகுல் கேட்டது:

“நமது தாக்குதல் பற்றிப் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால், எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? நாட்டிற்கு உண்மை தெரிய வேண்டும்”.

ராகுல் காந்தியின் கேள்விக்கு வெளிவிவகாரத் துறை பதில் சொல்லிவிட்டது. என்னவென்றால்: இந்தியா தனது தாக்குதலைத் துவங்குவதற்கு முன்னதாக அது பற்றிப் பாகிஸ்தானுக்குத் தகவல் சொல்லவில்லை, இந்தியா தனது ஆரம்ப அடியை அடித்த பின்னர், அந்தத் தாக்குதலானது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் நடத்தப் பட்டது, அந்நாட்டின் ராணுவத் தளங்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப் பட்டது, இதைத்தான் அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார், ஆனால் அவர் பேச்சு திரிக்கப் படுகிறது

பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் முதலில் தாக்குதல் நடத்திய இந்தியா, பின்னர் ஏன் அது பற்றிப் பாகிஸ்தானிடம் தகவல் சொன்னது? ஏனென்றால், அந்த அடியை வாங்கிய கலக்கத்தில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களின் மீது தாக்குதல் செய்யக் கூடாது, அது நடந்தால் இந்தியா பாகிஸ்தானின் ராணுவத் தளங்களையும் தீவிரமாகத் தாக்க வேண்டியிருக்கும், பிறகு அது நீண்ட போருக்கு வழிவகுக்கும், முடிந்தவரை போரைத் தவிர்க்கலாம், என்ற மேலான எண்ணத்தில் இந்தியா பாகிஸ்தானிடம் பின்னர் அந்தத் தகவலைச் சொன்னது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

ஒரு பயில்வான் தன்னை அனாவசியமாக அடித்து ஒடும் ஒரு தெருக் காவாலியைப் பிடித்து, தன்னை அடித்த கையைப் பற்றி முறுக்கி அதன் மணிக்கட்டில் பலமாக ரண்டு போட்டு, அதன் பின் “பாரு, இத்தோட விட்றேன். இனிமே நீ பேஜார் பண்ண, பெண்டை நிமித்திருவேன். ஜாக்கிரதை!” என்று அந்தக் காவாலியை எச்சரிக்கும் செயலைப் போல் இந்தியா செய்தது – தனது முதல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த தகவலின் மூலமாக.

ராகுல் காந்தியின் கேள்வியைச் சற்று ஆராயலாம்.

காங்கிரஸின் முடிசூடா மன்னர் ராகுல் காந்தி. அவர்தான் லோக் சபாவில் எதிர்க் கட்சித் தலைவர். எதுவானாலும் அவர் இப்படி ஒரு மழலையாக, பாகிஸ்தானை மகிழ்விக்கும் விதமாக, நமது மத்திய அமைச்சரைப் பார்த்துக் கேட்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?  அப்படியானால் நீங்கள் தேசபக்தர்.

ராகுல் காந்தியின் கேள்விக்கான பின்னணி நமக்குத் தெரியும்.

சென்ற மாதம் பாகிஸ்தான் ராணுவம் நான்கு பயங்கரவாதிகளை இந்தியாவின் பஹல்காமிற்கு அனுப்பி 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் படுகொலையை நிகழ்த்தியது. அதை அடுத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை வெளுத்து வாங்கிப் பணிய வைத்தது – நான்கே நாட்களில்.  நிலைகுலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் கேட்க, போர் நின்றது. 

சமீபத்திய ஜெய்சங்கரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ஏன் தனது பிதற்றல் கேள்வியைக் கேட்டார்? அரசியல் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி தன்னைச் சுற்றித் தானே பின்னிக் கொண்ட வலைதான் அவரை அப்படிக் கேட்க வைத்தது.

2004-2014 ஆகிய பத்து வருடங்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை மதித்துச் செயல்படும் மன்மோஹன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தது. 

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

2014-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, 11 வருடங்களாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.

மோடி ஆட்சியில் சாதாரண மக்களுக்கான குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை வசதிகள், மருத்துவக் காப்பீடு, வீடு கட்ட உதவி போன்ற தேவைகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெரிதும் நிறைவேறுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கின்றன. இன்னும் பல சாதனைகளும் மோடி ஆட்சியில் உண்டு. இந்த ஆட்சியில் மத்திய அரசு செய்யும் வேலைகளில் – அதுவும் உயர் மட்டத்தில் – லஞ்ச ஊழல் இல்லாமல் போனது. நாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இது போன்ற பரவலான பெரிய சாதனைகளை, இவற்றுக்கு இணையானதை, மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி – அதாவது, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் லகான் பிடித்த ஆட்சி – செய்யவில்லை. அப்போது மத்தியில் ஊழல் ஊற்றெடுத்தது.

கோணல் புத்தியில், ராகுல் காந்தி தனது அம்மா சோனியா காந்தியை ஓரம் கட்டியவர். கொழுப்புப் பேச்சில் அவர் எவரையும் மிஞ்சியவர். அடுத்த பிரதமருக்கான ஆசையில் மோடியை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்று அவர் துடிக்கிறார். “எங்கள் மன்மோஹன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி சாதனைகள் மாதிரி, மோடி அரசு தனது பதினோரு ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என்று ராகுல் காந்தியால் பேச முடியாது, அப்படிப் பேசி அவர் மோடி அரசை எதிர்க்க முடியாது. எரிச்சலான ராகுல் காந்தி அவ்வப்போது என்ன செய்கிறார்?

“தேசத்தின் காவலாளி மோடி, ஒரு திருடர். சீனாவின் எல்லைக் கட்டுப்பாட்டு அத்துமீறல்களை அவர் ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாமல் நமது நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறார். ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மோடி முறைகேடு செய்கிறார்” என்ற வகையில் மலிவான பொய்களை மட்டும் ராகுல் காந்தியால் பேச முடிகிறது. 

இப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் மோடியின் பேரும் புகழும் இந்திய மக்களிடையே மேலும் உயர்கிறது. பார்த்தார் ராகுல் காந்தி. மோடியின் பேரை உடனே ரிப்பேர் செய்யவேண்டும் என்று எண்ணினார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மோடி அரசு முட்டாள்தனமாக பாகிஸ்தானுக்கு இந்தியத் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தது, அதனால் நாம் சில போர் விமானங்களை இழந்தோம், தேசப் பாதுகாப்பு நடவடிக்கையில், நமது போர் விமானிகள் உயிரைக் காப்பதில், ராகுல் காந்தியான நான்தான் கிங்கு என்று அவிழ்த்து விடுவோம். வேறு வகையில் மோடி அரசை நம்மால் எதிர்க்க முடியவில்லை என்றால் இதைச் செய்வோம்’ என்று நினைத்தார் ராகுல் காந்தி. விளைவு, அவரது பாப்பா கேள்வி. இதுதான் விஷயம்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

நல்ல வேளை. ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை எடுத்துச் சொல்ல பிற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வரும் குழுக்கள் எதிலும் ராகுல் காந்தி இல்லை. அந்தக் குழு ஒன்றில் அவர் சேர்க்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?

ஒரு குழு உறுப்பினராக ராகுல் காந்தி ஏதாவது வெளிநாட்டுக்குச் செல்கையில் அந்த நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளின் முன்னால் அமர்ந்து, “பஹல்காம் பயங்கரவாதத்திற்கு முன்பாக மோடி அரசு நான்கு பேரைப் பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு 25 அப்பாவி பாகிஸ்தானியர்களைக் கொன்று போட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது, அதை ஜெய்சங்கர் தீர்த்துவைக்க வேண்டும்!” என்று அவர் உச்சகட்டமாக உளற மாட்டாரா?

Author: R. Veera Raghavan
Advocate, Chennai

veera.rvr@gmail.com

https://rvr-india.blogspot.com

Related articles

Recent articles

spot_img