
ரஜினியை ஒரு அற்புத மனிதனாக பார்க்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு பாராட்டி உள்ளார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் முதலமைச்சராக விரும்பவில்லை என்றும், இளைஞர் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன் என்றும், கட்சி தலைமைக்கும் ஆட்சிக்கும் இரண்டு தலைமைகள் இருக்கும் என்றும், கட்சி பதவிகள் குறைக்கப்படும் என்றும் தனது அரசியல் கொள்கைகளை வெளியிட்டு உள்ளார்.
இதனை பாராட்டி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.
தமிழன்தான் ஆட்சிக்கு தலை சிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.
ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை அரசனாக ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


