அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.
நடிகர் மனோபாலா நடத்தும் யூடியூப் சேனலுக்காக நடிகர் சிங்கமுத்துவை மனோபாலா பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் சிங்கமுத்து, நடிகர் வடிவேலு குறித்து சில கருத்துகளை கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, வடிவேலு கடந்த மார்ச் 19ஆம் தேதி அந்த பேட்டி குறித்து நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட சிங்கமுத்து, நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நான் வடிவேலு மீது வெறுப்பாகவில்லை. இப்பொழுது கூட அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது தெரிந்ததும் அவருக்கு அது பிடிக்கவில்லை. எதுக்கு நம்மளுடைய டிரெண்ட்டை அங்கே சொல்றன்னு கேட்டார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இங்கே யாரும் யாரையும் காப்பி அடிக்கலையே. அது அவருக்கு புரியலை” என்று கூறினார்.

“என்னுடைய மகனை ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கு அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, அவனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவன் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகன் ஏன் ஹீரோவாகக் கூடாது? என்னுடைய பையன் பெரிய ஹீரோவாகிடுவானோன்னு நினைச்சுட்டார். அது அவருக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.”
“இப்போது கூட வடிவேலுவை நேராக வரச் சொல்லுங்கள். என்ன பிரச்சனை என்று முகத்துக்கு நேராக பேச நான் தயாராக இருக்கிறேன். நான் வடிவேலுவை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போ கூட அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. கேட்பார் பேச்சை கேட்பார். அதுதான் இந்த நிலைக்கு காரணம். 8 லட்சத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த இடத்தை 22 கோடிக்கு விற்றுவிட்டார்.”

“நான் அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று எனக்கு தெரியாது. அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக தொடரப்பட்ட அந்த வழக்கு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். உண்மையாகவே அருமையான நடிகனை இழந்துட்டோம்” என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிக் கூட்டணியில் நடித்து வந்த நடிகர்களுள் வடிவேலு – சிங்கமுத்துவுக்கு இடமுண்டு. இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இந்நிலையில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கமுத்து மீது வடிவேலு நிலமோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். பல கோடி ரூபாயை தன்னிடம் ஏமாற்றி பறித்து விட்டதாக சிங்கமுத்து மீது புகார் அளித்திருக்கிறார். ஆனால், சிங்கமுத்து “நான் எந்த தவறும் செய்யவில்லை. அனைத்து நடிகர்கள் முன்னிலையில் இந்தப் பிரச்சனையை நேரடியாக பேசி முடிக்க தயார்” எனத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நேர்காணல் தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு வடிவேலு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள வாட்சாப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



